திருவண்ணாமலையில் இருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை நேற்று தொடங்கியது. அதன்மூலம், திருவண்ணாமலைக்கு வரும் ஆந்திர மாநில பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சுவாமி செய்து வருகின்றனர். தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து அனுதினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு இரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கிரிவல பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனடிப்படையில் ஆந்திரா மாநிலம் நரசப்பூர் பகுதியில் இருந்து நரசப்பூர் அதிவிரைவு இரயில் திருவண்ணாமலை இரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் காலை 11 மணிக்கு புறப்பட்டு வேலூர், காட்பாடி, சித்தூர், பாகலா, திருப்பதி, ரேணுகுண்டா, நெல்லூர், ஓங்கல், சித்ரலா, பாபட்லா, தெனாலி, விஜயவாடா, குடிவாடா, பிம்மவரம், பலகோலூ வழியாக நரசப்பூர் ரயில் நிலையத்தை நள்ளிரவு 2 மணிக்கு சென்றடையும். அதேபோல், நரசபுரத்தில் பகல் 1 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு அதிகாலை 4.55 மணிக்கு வந்தடையும்.
மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்கான கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை – நரசபூர் வாராந்திர சிறப்பு ரயில், இந்த மாதத்தில் 17ம் தேதி, 24ம் தேதி, ஆகஸ்ட் மாதத்தில் 7ம் தேதி, 14ம் தேதி, 21ம் தேதி, செப்டம்பர் மாதத்தில் 4ம் தேதி, 25ம் தேதி ஆகிய நாட்களில் திருவண்ணாமலையில் இருந்து இந்த சிறப்பு ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை – நரசப்பூர் சிறப்பு ரயில் இயக்கப்படுவதால், திருவண்ணாமலை மற்றும் திருப்பதி, காளஹஸ்தி செல்லும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிறப்பு ரயிலுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
திருவண்ணாமலை இரயில் நிலையத்தில் இருந்து ஆந்திரா மாநிலம் நரசாப்பூர் பகுதிக்கு செல்லும் சிறப்பு இரயிலுக்கு பொது மக்கள் மற்றும் ஏபிஜிபி ஒருங்கிணைப்பாளர் சீனுவாசன் இணை ஒருங்கிணைப்பாளர் சம்பத் ஆலோசகர் வேங்கடரமேஷ்பாபு , சமூக ஆர்வலர்கள் தீபாராதனை காண்பித்து இனிப்பு வழங்கி நேற்று இரயிலை வழியனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே துறை அமைச்சர் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
ஏபிஜிபி அமைப்பினருக்கு பக்தர்கள் கோரிக்கை
ஆன்மிக பக்தர்கள் மற்றும் ஏபிஜிபி அமைப்பினரும் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன் எதிரொலியாக, திருவண்ணாமலையில் இருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதித்தது.
மேலும் இதே போல் திருவண்ணாமலையிலிருந்து திண்டிவனம் வழியாக சென்னைக்கு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.




