நாமக்கல்:
நாமக்கல் பில்டர்ஸ் அசோசியேசஷன் ஆஃப் இந்திய மையத்தின் சார்பில், இலவச மருத்துவ முகாம் வேலகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கான்ட்ராக்டர் பேரரசு முன்னிலை வகித்தார்.
பில்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் தென்னரசு தலைமை வகித்து, வேலகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பிற்காக கிரில் அமைக்கும் பணிக்கு ரூ. 50 ஆயிரம் நன்கொடை அளித்தார்.
பின்னர் அவர் மருத்துவ முகாமை துவக்கி வைத்துப் பேசியதாவது:
நாமக்கல் கட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் இதுவரை நடைபெற்ற 9 இலவச மருத்துவ முகாம்களில் மொத்தம் 3000-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முகாமிலும் பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் நடத்தி, அவர்களுக்கு டாக்டர்கள் மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மேலும் தேவையானோருக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு முகாமிலும் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு, திருச்செங்கோடு சுவாமி விவேகானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேவையான சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கான மருத்துவக் கட்டணம் கட்டுநர் சங்கத்தின் மூலம் செலுத்தப்படுகிறது.
இந்த சேவையை நாமக்கல் பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார். பில்டர்ஸ் அசோசியேசன் நிறுவன தலைவர் கணேசன், நிர்வாகிகள் வெங்கடாசலம், நடராஜன், பாலசுப்ரமணியம், செந்தில், தொழிலதிபர் பூபதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முடிவில் செயலாளர் இளையராஜா நன்றி கூறினார்.




