Close
மார்ச் 7, 2026 2:33 மணி

அண்ணாமலையார் கோவில் முன்பு வணிக வளாகம் கட்ட உயர்நீதிமன்றம் அதிரடி தடை

அண்ணாமலையார் கோவில் முன் வணிக வளாகம் கட்ட கூடாது என்றும், பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் குறித்து அறநிலையத்துறை என்ன முடிவு செய்துள்ளது என்பதை இரண்டு வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களை பராமரிப்பது, பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்துவதற்காக, தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலின் கோபுரம் முன்பு, 6 கோடி ரூபாய் செலவில் வணிக வளாகம் கட்ட அறநிலையத் துறை அனுமதியளித்து, 2023ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ராஜகோபுரத்தின் முன் வணிக வளாகம் கட்டுவது, கோவிலின் விழாக்களுக்கு இடையூறாக அமையும் எனவும், விழா காலங்களில் பக்தர்கள் பங்கேற்க தடையாக இருக்கும் எனவும் கூறி, இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

வணிக வளாகம் கட்டும் திட்டத்தை மறு பரிசீலை செய்ய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, வணிகவளாகம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படப் போவதில்லை என அறநிலையத் துறை ஏற்கனவே உத்தரவாதம் அளித்திருந்த நிலையில், ராஜகோபுரம் முன் பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவது குறித்த மாற்றுத் திட்டம் சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அறநிலையத் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்று இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், அண்ணாமலையார் கோவிலை விட்டு தொலைவில் அரசு புறம்போக்கு நிலங்கள் இருக்கிறதா என கண்டறிந்து தெரிவித்தால் அங்கு வணிக வளாகம் கட்டலாம் என்றனர்.

கோவிலுக்கு அருகில் கோவில் நிலமாக இருந்தாலும் சரி, அரசு புறம்போக்கு நிலமாக இருந்தாலும் சரி, எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

மேலும், தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களை பராமரிப்பது, பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்துவது போன்றவற்றுக்காக, தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என, இந்து சமய அறநிலையத் துறைக்கு அறிவுறித்திய நீதிபதிகள், திருப்பதி கோவில் பராமரிப்பை உதாரணமாக சுட்டிக்காட்டினர். பின்னர் இந்த வழக்குகளின் விசாரணையை நீதிபதிகள், செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

பாத்திர கடை உரிமையாளர்கள் கவலை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன் பாத்திரக்கடைகள் வரிசையாக அந்த காலத்தில் இருந்தே கட்டப்பட்டிருந்தது. வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் கோவில் அருகே இருக்கும் பாத்திர கடைகளில் பாத்திரங்களை விரும்பபி வாங்கிச்செல்வர். திருமண ம் போன்ற முகூர்த்த நாட்களிலும் அந்தப் பகுதியில் ஏராளமான அளவில் வியாபாரம் நடைபெறும்.

வெறும் தகரத்தினால் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டிருந்த அந்த பாத்திரக்கடைகளின் எண்ணிக்கை அதிகம் ஆன காரணத்தினால் பக்தர்கள் அந்த பகுதியில் நடந்து செல்வதற்கு சிரமம் ஏற்பட்டது. திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகரிக்க தொடங்கியது.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் திட்டமிடப்பட்ட இரண்டு அடுக்கு மாடி கட்டிடம் கட்டுவது என்று அறநிலையத்துறை முடிவு செய்தது. அதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அமைச்சர் எ.வ. வேலு அடிக்கல் நாட்டினார்.

கட்டிடப் பணிகள் தொடங்கிய நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்பு வணிக வளாகம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் தற்போது தடை உத்தரவு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.

புதிய வணிக வளாகம் கட்டப்படும் என்று அறநிலையத்துறை கூறியதின் அடிப்படையில் அங்கே வியாபாரம் செய்து வந்த பாத்திர வியாபாரிகள் தங்கள் கடைகளை காலி செய்து கொடுத்திருந்தனர். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் அங்கே வணிக வளாகம் கட்ட முடியாது என்கின்ற நிலையில் பாத்திர கடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top