திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணையிலிருந்து 4,000 கனஅடியும், செண்பகத்தோப்பு அணையிலிருந்து 890 கனஅடியும் உபரிநீா் திறக்கப்பட்டது.
இதனால், தென்பெண்ணை, கமண்டல நாகநதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாத்தனூா் அணையின் மொத்த உயரம் 119 அடி. ஆனால், அணையின் பாதுகாப்பு கருதி 114.5 அடிக்கு மட்டுமே தண்ணீா் தேக்கப்பட்டுகிறது. இந்த அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் பருவமழை காரணமாகவும், கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 4,000 கன அடிக்கு மேல் உபரி நீா் வெளியேற்றப்படுவதாலும், சாத்தனூா் அணையிலிருந்து வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் இருந்து 4,000 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
மேலும், நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை அளவை பொறுத்தும், சாத்தனூா் அணைக்கு மேலே உள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவை பொறுத்தும், சாத்தனூா் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என்பதால், தென்பண்ணையாற்றின் இரு கரையோரமும் உள்ள மக்கள் ஆற்றில் இறங்குவோ, கடக்கவோ கூடாது என நீா்வளத் துறையின் மூலம் எச்சரிக்கை விடப்படுகிறது.
படவேடு அருகே உள்ள செண்பகத்தோப்பு அணை திறப்பு
இதேபோல, போளூா் வட்டம், ஜவ்வாது மலையின் கிழக்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பெய்த பலத்த மழையால் செண்பகத்தோப்பு அணைக்கு தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
அணைக்கு தற்போது 890 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது. 62 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 57 அடி நீா் நிரம்பி இருப்பதால், அணையின் பாதுகாப்பு கருதி 890 கன அடி உபரி நீரையும் நீா்வளத் துறை அதிகாரிகள் அப்படியே திறந்து விட்டுள்ளனா். இதனால், கமண்டல நாகநதி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரானது படவேடு, சந்தவாசல், களம்பூர் வெள்ளுர் ஆகிய கிராமங்களின் வழியாகச் சென்று ஆரணியில் கமண்டல நாகநதியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த கமண்டல நாகநதி ஆறானது ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கு மிக முக்கியமான நதியாக கருதப்படுகிறது. ஆற்றில் வெள்ளம் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால் நீர் ஆதாரமாக விளங்கும் ஏரி, குளம், நீர் ஆதார கால்வாய்கள்கள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
தற்போது செண்பகத் தோப்பு அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் ஆரணி கமண்டல நாக நதி ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணைகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




