திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் 2019-20ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் கலந்துகொண்டு 1295 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரை ஆற்றினார்.
விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். கல்லூரி இயற்பியல் துறைத் தலைவா் பாலகிருஷ்ணன் வரவேற்றாா். முதல்வா் ரேவதி தொடக்கவுரையாற்றினாா்.
விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் பேசியதாவது:
ஒருவர் கற்ற கல்வி அவர் குடும்பத்தைச் சார்ந்தும், அவரைச் சார்ந்தும் ஏழு தலைமுறைக்கு பயனுள்ளதாக இருக்கும் என வள்ளுவர் கூறியுள்ளார். கல்வியே மனிதனைமேம்படுத்தக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் என நெல்சன் மண்டேலாவும் கூறியுள்ளார். வாழ்க்கையை மாற்றும் தந்திரம் கல்வி என டாக்டர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். வாழ்க்கை தடுமாறும் எனவும் கல்வி அனைவருக்கும் அவசியம் என பேரறிஞர் அண்ணா குறிப்பி ட்டுள்ளார்.
இன்று தமிழ்நாடு வளர்ந்த மாநிலமாக உள்ளது. மதிய உணவு திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்தார். இன்றைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தினந்தோறும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள 20 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வருகிறார் .
பெண் பிள்ளைகள் படித்தால் தான் நாடு முன்னேறும் , வீடும் முன்னேறும் என உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கி புதுமைப்பெண் திட்டத்தையும், அதேபோன்று உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தையும் அறிவித்துள்ளார் .
தமிழ்நாட்டில் இது போன்று பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றுவதால் தான் இந்திய துணை கண்டத்திலேயே உள்ள 27 மாநிலங்களில் தமிழ்நாடு மாநிலம் முதன்மை மாநிலமாக பொருளாதார வளர்ச்சியில் 16.9 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்திய அளவில் 100 பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுத்து அதில் தமிழகத்தி ல் 2 4 பல்கலைக்கழகம் சிறந்த பல்கலைக்கழகங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் மிகப்பெரிய சொத்து கல்வி என்று தமிழ்நாடு முதலமைச்சர் எப்போதும் குறிப்பிடுவார். அதன்படி மாணவர்கள் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி கல்வியில் மேலும் முன்னேற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
விழாவில் மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், பொறியியல் துறைத் தலைவா் அயோத்தி, வேதியியல் துறைத் தலைவா் ரவி, வரலாற்றுத் துறைத் தலைவா் தனிஸ்லாஸ், ஆங்கிலத் துறைத் தலைவா் அறிவுசெல்வி மற்றும் இதர துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், கௌரவ விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனா். வணிகவியல் துறைத் தலைவா் செல்வன் நன்றி கூறினாா்.




