அரசை அமைப்பதற்கு தமிழக ஆளுநர் முதலில் விஜய்யின் தவெக கட்சியை அழைக்க வேண்டுமா என்பது குறித்து அரசியலமைப்பு வல்லுநர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்த சர்ச்சை, ஆளுநரின் விருப்புரிமை, அரசியலமைப்பு மரபு மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகியவை குறித்த பரந்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
தமிழகத் தேர்தலில் தனது முதல் போட்டியிலேயே விஜய், 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து சாதனை படைத்தார். ஆனாலும், 118 பெரும்பான்மை இடங்களைப் பெறுவதற்கு இன்னும் 10 இடங்கள் குறைவாகவே உள்ளன. ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம், தன்னையும் சேர்த்து 107 சட்டமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களை அவர் சமர்ப்பித்ததோடு, ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு ஐந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் வாய்மொழியாகத் தெரிவித்தார்.
இருப்பினும் “118 கையொப்பங்களுடன் வாருங்கள்” என ஆளுநர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். தற்போதைய அரசின் பதவிக்காலம் முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இந்த இழுபறி நீடிக்கிறது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக எந்தப் பலனும் இல்லை. தற்போதைய திமுக அரசின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், புதிய ஆட்சி அமைப்பது குறித்த சர்ச்சை, ஆளுநர்களின் அதிகாரங்கள் மற்றும் விருப்புரிமைகள் பற்றிய ஒரு பெரிய அரசியலமைப்பு விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.
தனிப்பெரும் கட்சியாக உள்ள கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது அவரது அரசியலமைப்பு ரீதியான கடமையா, அல்லது பெரும்பான்மை ஆதரவுக்கான போட்டி உரிமைகளை மதிப்பிட்டு அழைப்பு விடுப்பதற்கு முன் அவர் தனது விருப்புரிமையைப் பயன்படுத்த முடியுமா?
பல முன்னணி அரசியலமைப்பு வல்லுநர்களும் மூத்த வழக்கறிஞர்களும், அரசியலமைப்பு மரபுகள், உச்ச நீதிமன்ற முன்னுதாரணங்கள் மற்றும் ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து மாறுபட்ட விளக்கங்களுடன் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
பெரும்பான்மை ஆதரவைத் தீர்மானிப்பதற்கான இறுதி வழிமுறை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதே என்பதில் பரந்த உடன்பாடு இருந்தாலும், அந்த நிலைக்கு முன்னர் ஆளுநரின் விருப்புரிமையின் அளவு குறித்து சட்ட வல்லுநர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, தனிப்பெரும் கட்சியை முதலில் அழைப்பது ஆளுநரின் அரசியலமைப்பு ரீதியான கடமையாகும் என்று கூறினார். ஆளுநரின் இந்த நிலைப்பாடு அரசியலமைப்புக்கு முரணானது என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
ரோஹத்கியின் கூற்றுப்படி, தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதும், அவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதிப்பதும் ஆளுநரின் கடமையாகும். ஒரு கட்சி பதவியேற்க அழைக்கப்படுவதற்கு முன்பு, அது முதலில் 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்த முடியாது.அதிகபட்சமாக, சட்டமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள் சரியானவையா என்பதை ஆளுநர் சரிபார்க்கலாம்என்றும் அவர் வாதிடுகிறார்.
கடந்த காலங்களில் இந்தியா பல சிறுபான்மை அரசாங்கங்களைக் கண்டுள்ளது. மேலும், ஒரு அரசாங்கத்தை அமைக்க அழைக்கப்படுவதற்கு, முன் சரிபார்க்கப்பட்ட பெரும்பான்மை என்பது ஒரு அரசியலமைப்பு முன்நிபந்தனை அல்ல என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல் கூறுகையில், அரசாங்கத்தை அமைக்க யாரை அழைப்பது என்பதைத் தீர்மானிப்பதில், அரசியலமைப்பின் 163-வது சரத்து ஆளுநருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு விருப்புரிமையை வழங்குகிறது. தனிப்பெரும் கட்சிக்கா அல்லது பெரும்பான்மை ஆதரவைக் கோரும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கா முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் ஒரு இறுக்கமான சூத்திரத்தை அரசியலமைப்புச் சட்டம் வகுக்கவில்லை. இருப்பினும், ஒரு கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு முன்பு, 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக்கான ஆதாரத்தை ஆளுநர் வலியுறுத்த முடியாது என்பதை கவுல் ஒப்புக்கொண்டார்.
எஸ்.ஆர். பொம்மை எதிர் இந்திய யூனியன் (1994) வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மேற்கோள் காட்டிய அவர் னார். அதில், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை சபையில் பகிரங்கமாக நிரூபிக்கவும் உறுதிப்படுத்தவும் முடியும்” என்று நீதிமன்றம் கூறியிருந்தது. இந்தக் கொள்கையே நம்பிக்கை வாக்கெடுப்பைத் தீர்மானிக்கும் அரசியலமைப்பு வழிமுறையாக ஆக்குகிறது என்று கவுல் வாதிட்டார்.
அதே நேரத்தில், பிளவுபட்ட மக்கள் ஆணைக்குப் பிறகு ஒரு ஆளுநர் கட்சிகளை அழைக்க வேண்டிய வரிசைமுறையை, பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் வேண்டுமென்றே தீர்க்காமல் விட்டுவிட்டது என்று கவுல் சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற சூழ்நிலைகளுக்கான வழிகாட்டுதல்களை வகுக்க முயன்ற சர்க்காரியா ஆணையம் தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கு முன்னுரிமை அளிக்கவும், அதைத் தொடர்ந்து தனிப்பெரும் கட்சிக்கும், பின்னர் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கும் அழைப்பு விடுக்கவும் பரிந்துரைத்தது. ஆயினும், இந்தப் பரிந்துரைகள் ஒருபோதும் உறுதியான நீதித்துறை அங்கீகாரத்தைப் பெறவில்லை
முக்கியமாக, “சட்டமன்றத்தில் பரந்த ஆதரவைப் பெற்றுள்ள கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணியை ஆளுநர் அழைக்கலாம்” என்று பஞ்சி ஆணையம் கூறியதன் மூலம் சில தெளிவின்மைகளை ஏற்படுத்தியுள்ளது.
கோவா மற்றும் கர்நாடகாவில் உச்ச நீதிமன்றம் தலையிட்டதை குறிப்பிட்ட கௌல் சந்திரகாந்த் கவ்லேகர் எதிர் இந்திய யூனியன் வழக்கில், ஆளுநர் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார், ஆனால் உச்ச நீதிமன்றம் தலையிட மறுத்து, அதற்குப் பதிலாக உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.
இதேபோல், ஜி. பரமேஸ்வரா எதிர் இந்திய யூனியன் (2018) வழக்கில், ஆளுநர் தனிப்பெரும் கட்சிக்கு அழைப்பு விடுத்தார், அப்போதும் நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடும்போது ஆளுநரின் விருப்புரிமையைக் கேள்வி கேட்காமல் இருந்தது. சட்டமன்றத்தில் பெரும்பான்மை விரைவாகச் சோதிக்கப்படும் வரை, நீதிமன்றங்கள் பொதுவாக ஆளுநரின் விருப்புரிமையை மதித்து வந்துள்ளன என்பதை இந்த வழக்குகள் காட்டுவதாக கௌல் கூறுகிறார்.
இருப்பினும், மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் மனு சிங்வி கூறுகையில் எந்தவொரு போட்டி கூட்டணியும் முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலையில், தனிப்பெரும் கட்சியை ஆளுநர் அழைக்க வேண்டும் என அரசியலமைப்பு அறநெறி, நிறுவப்பட்ட முன்னுதாரணம் மற்றும் ஜனநாயக மரபு ஆகியவை வலியுறுத்துகின்றன என்று சிங்வி வாதிட்டார்.
எனவே, தமிழக சர்ச்சை என்பது ஒரு மாநில அளவிலான அரசியல் தகராறு என்பதைத் தாண்டிய ஒன்றாக மாறியுள்ளது. ஆளுநரின் தன்னிச்சையான அதிகாரங்கள் மற்றும் தொங்கு சட்டமன்றத்தில் அரசாங்கம் அமைப்பதற்கான உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபு இல்லாதது ஆகியவற்றைச் சுற்றியுள்ள தீர்க்கப்படாத அரசியலமைப்பு ரீதியான முரண்பாடுகளை இது மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.
இறுதியில், அனைத்துத் தரப்பினரும் ஒப்புக்கொள்வது போல, ஒரு அமைப்பின் சட்டப்பூர்வத்தன்மைக்கான தீர்க்கமான சோதனை என்பது, அவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பே ஆகும்.




