நாமக்கல் மாவட்டத்தில் 22 தனியார் பள்ளிகளுக்கு, நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 237 தனியார் பள்ளிகள் அரசு அனுமதியுடன் செயல்படுகிறது. இவற்றில் 22 பள்ளிகள் சட்டப்படி உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தன.
இப்பள்ளிகளுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. போதிய கால அவகாசம் வழங்கப்பட்டும், அவர்கள் அனுமதி பெறுவதற்காக உரிய முறையில் விண்ணப்பிக்கவில்லை.
எனவே மாணவ மாணவிகளின் பாதுகாப்பிற்கு உறுதியற்ற தன்மை ஏற்படுவதால் நடப்பு 2026-2027 கல்வியாண்டு முதல் எக்காரணம் கொண்டும் இப்பள்ளிகள் செயல்படக்கூடாது எனவும், எல்.கே.ஜி. முதல் எந்தவொரு வகுப்பிலும் மாணவர் சேர்க்கை நடைபெறக்கூடாது எனவும் பள்ளி நிர்வாகத்தினருக்கு தெரிவிக்கப்படுகிறது. அறிவிப்பிற்கு மாறாக மாணவர்கள் சேர்க்கப்பட்டு பள்ளி செயல்பட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெற்றோர்கள் இந்த பள்ளிகளில் மாணவ மாணவிகளை சேர்க்க வேண்டாம். அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் மட்டும் தங்கள் குழந்தைகளை சேர்க்கவேண்டும். இது குறித்த சந்தேகங்களுக்கு நாமக்கல் மாவட்ட சிஇஓ ஆபீஸ் செல்போன் எண். 73730 02791, தனியார் பள்ளிகளுக்கான டிஇஓ அலுவலகம் தொலைபேசி எண். 04286 – 293981 மூலம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் செயல்பட்டதால், சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்ட தனியார் பள்ளிகள்:
நாமக்கல் டைம் கிட்ஸ் நர்சரி ஸ்கூல், ஏபிசி கிட்ஸ், ஹனி பனி கிட்ஸ், ஆரஞ்சு அகாடமி, சன் பிளவர், அக்ஸ்ரம், ஸ்பார்க்கில் அகாடமி, யுரோ கிட்ஸ், மகிழம், துளிர், ஸ்கூல் ஆப் மாண்ட்டசரி,
செல்லப்பம்பட்டி ஸ்மைலிஸ் வித்யாஷ்ரமம்,
எர்ணாபுரம் ஆல்பாபெட்ஸ் பிரி ஸ்கூல்,
நல்லிபாளையம் தீக்ஷா விஷனரி பள்ளி,
சேந்தமங்கலம் துலிப் கார்டன் நர்சரி பள்ளி,
பொத்தனூர் ஆப்பிள் நர்சரி பள்ளி,
எருமப்பட்டி காவேரி மழலையர் பள்ளி,
பள்ளிபாளையம் கோல்டன் நர்சரி பள்ளி, கலைவாணி நர்சரி பள்ளி, எவர்கிரீன் இண்டர்நேசனல் நர்சரி பள்ளி, பவித்திரம் எஸ்.எம்.எஸ் நர்சரி பள்ளி,
என்.கந்தம்பாளையம் காந்தி சிபிஎஸ்இ பள்ளி ஆகிய 22 பள்ளிகளில் பொதுமக்கள் யாரும் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.



