நாமக்கல் மாநகராட்சியில் இயற்கை செழிப்பு உரம் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது. நாமக்கல் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தினசரி மொத்தம் 54 மெட்ரிக் டன் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.
இதில் 33 மெட்ரிக் டன் மக்கும் கழிவுகள், மாநகராட்சியில் உள்ள 7 நுண்ணுரம் தயாரிக்கும் மையங்களில், மக்கும் கழிவுகளை அரைத்து 45 நாட்களில் உரமாக்கி, பின்பு காயவைத்து, சலித்து அதனை ஒரு செழிப்பு உரமாக தயாரிக்கப்படுகிறது.
இவ்வாறு தயார் செய்யப்பட்ட செழிப்பு உரம் பாக்கெட் விற்பனை துவக்க விழா நாமக்கல் உழவர் சந்தையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, உரம் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். செழிப்பு உரம் 1 கிலோ ரூ. 20 விலையில் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. முதல் நாளில் 51 கிலோ உரம் விற்பனை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சேகர், மாநகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், ஜான் ராஜா, சுப்பிரமணியன், நந்தினி மற்றும் 21 வது வார்டு கவுன்சிலர் நந்தினிதேவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




