Close
ஜூலை 14, 2026 1:04 மணி

நெதர்லாந்து நடுவர் 38 வயதில் மர்ம மரணம்: கால்பந்து உலகம் அதிர்ச்சி

நடுவர் ராப் டைபெரிங்க்

கால்பந்து உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, நெதர்லாந்தைச் சேர்ந்த பிரபல நடுவர் ராப் டீபெரிங்க் தனது 38வது வயதில் திடீரென காலமானார். வட அமெரிக்காவில் நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை நடுவர் குழுவிலிருந்து அவர் நீக்கப்பட்ட சில வாரங்களிலேயே இந்த மர்ம மரணம் நிகழ்ந்துள்ளது ரசிகர்களையும் கால்பந்து அமைப்புகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நெதர்லாந்தைச் சேர்ந்த ராப் டீபெரிங்க், கால்பந்து உலகில் மிகவும் மதிக்கப்படும் நடுவர்களில் ஒருவராவார். 2017 ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்தின் முதன்மை கால்பந்து தொடரான ‘எரெடிவிசி’ போட்டிகளில் நடுவராகப் பணியாற்றி வந்தார்.2024 ஆம் ஆண்டு நடைபெற்ற புகழ்பெற்ற யூரோ கோப்பை மற்றும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் வீடியோ அசிஸ்டெண்ட் ரெஃப்ரி அதிகாரியாகச் சிறப்பாகச் செயல்பட்டார்.

இதன் காரணமாகவே, 2026 ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடருக்கான வீடியோ அசிஸ்டெண்ட் ரெஃப்ரி நடுவர்கள் பட்டியலிலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. உலகக் கோப்பைத் தொடரில் நடுவராக அறிமுகமாகவிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், லண்டனில் நடைபெற்ற ஒரு போட்டிக்குப் பிறகு, மைனர் சிறுவனுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் லண்டன் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டதால் கடந்த மே மாதம் ஃபிஃபா அமைப்பு அவரது பெயரை திடீரென பட்டியலில் இருந்து நீக்கியது.

இருப்பினும், இந்த வழக்கின் விசாரணையில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் லண்டன் காவல்துறை இந்த வழக்கை கைவிட்டது. தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகவும் டீபெரிங்க் ஊடகங்களிடம் தெரிவித்தார். ஆனாலும், ஃபிஃபா அமைப்பு அவரை மீண்டும் உலகக் கோப்பை நடுவர் குழுவில் சேர்க்க மறுத்துவிட்டது. இந்த முடிவு தனக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்ட போதிலும், உலகக் கோப்பை வாய்ப்பை இழந்த விரக்தியில் இருந்த ராப் டீபெரிங்க், ஜூலை 13 அன்று தனது வீட்டில் எதிர்பாராத விதமாக உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நெதர்லாந்து கால்பந்து சங்கம், ராப் டீபெரிங்கின் மரணம் எங்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாங்கள் ஒரு சிறந்த நடுவரை மட்டுமல்ல, ஒரு அன்பான அர்ப்பணிப்புமிக்க சக ஊழியரையும் இழந்துவிட்டோம் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளது.

ஃபிஃபா அமைப்பும் சர்வதேச கால்பந்து சமூகத்தின் சார்பில் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளது.

2026 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், தகுதி வாய்ந்த இளம் நடுவர் ஒருவரின் இந்த திடீர் மரணம் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top