Close
ஆகஸ்ட் 9, 2026 7:36 மணி

அண்ணாமலையார் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்

பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் திருக்கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனே மலையாக காட்சி அளிக்கிறார்.

கிரிவலம் மட்டுமின்றி, அருணகிரிநாதர்,ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி உள்ளிட்ட பல ரிஷிகள் மற்றும் ஞானிகள் வாழ்ந்த பூமியாகவும் திருவண்ணாமலை விளங்குகிறது.

திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், ஸ்ரீரமண மகரிஷி ஆசிரமம் உள்ளிட்ட இடங்களுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, உலகின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர்   அமித்ஷா, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து ரமணாசிரமத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியிலும் அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் பங்கேற்றார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை மாலை 4:20 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து 4.25 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலமாக திருவண்ணாமலைக்கு புறப்பட்டு மாலை 5:20 மணிக்கு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள உண்ணாமலையம்மன் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட்டில் வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட மத்திய அமைச்சர் அமித்ஷா கிரிவலப்பாதை வழியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் பின்புற கோபுரமான பேகோபுரம் வழியாக கோவிலுக்கு உள்ளே சென்றார்.

மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்த கோவில் நிர்வாகம் பூரண கும்பமரியாதையும் அளித்தது.

அவர் அண்ணாமலையார் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். பின்னர் அவர் உண்ணாமலை அம்மனையும் தரிசனம் செய்தார் . தொடர்ந்து நவகிரக சன்னதிக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்த அவர் அண்ணாமலையார் கோவில் முன்பு உள்ள கொடிமரத்தை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் சிவாச்சாரியார்கள் மத்திய அமைச்சருக்கு மாலை அணிவித்து அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் புகைப்படத்தை வழங்கினார்.

1 மணி நேரத்திற்கு மேலாக அண்ணாமலையார் கோவில் உள்ளே சிறப்பு வழிபாடு செய்த மத்திய அமைச்சர் அமித்ஷா மீண்டும் பேகோபுரம் வழியாக கான்வாய் வாகனத்தில் ஏற முயன்ற பொழுது கோபுரத்துக்கு வெளியே தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்திருந்ததால் வாகனத்தில் ஏறாமல் நடந்தே கோபுரத்திற்கு வெளியே வந்த அவர் கூடி இருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உற்சாகமாக கையசைத்து வணக்கம் தெரிவித்தார்.

மீண்டும் காரில் ஏறி கிரிவலப்பாதையில் உள்ள ரமணமகரிஷி ஆசிரமத்திற்கு புறப்பட்டு சென்றார். ரமண மகரிஷி ஆசிரமத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு ஆசிரமம் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு சால்வை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து 20 நிமிடங்கள் ரமண பகவானை வழிபட்ட மத்திய அமைச்சர் அமித்ஷா பின்னர் 7 மணி அளவில் ரமணாசிரமத்தில் இருந்து கார் மூலமாக பாண்டிச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 1500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் மத்திய ரிசர்வ் படை போலீசார் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு பிரிவு போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நிகழ்வில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி , திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ரமேஷ், வடக்கு மாவட்ட தலவைர் கவிதா வெங்கடேசன், வேலூர் கோட்ட அமைப்பு செயலாளர் எஸ். குணசேகரன், வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர், வழக்கறிஞர்  பிரிவு மாவட்ட தலைவர் கிஷோர் குமார் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ரமண பகவானை வழிபட்ட மத்திய அமைச்சர் அமித்ஷா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top