Close
ஆகஸ்ட் 13, 2026 8:49 மணி

உசிலம்பட்டி அருகே தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி அருகே சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓணான் கரடு என்ற இடத்தில் தனியார் கல்குவாரிக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சங்கரலிங்காபுரம், பாப்பநாயக்கன்பட்டி, டி.இராமநாதபுரம் மற்றும் செல்லாயிபுரம் ஆகிய 4 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து, இந்தத் தனியார் கல்குவாரிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இத்திட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், முதலில் தங்கள் கிராம வீடுகளில் கருப்புக் கொடிகளைக் கட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்று ஓணான் கரடு பகுதியில் இயங்க முற்பட்ட கல்குவாரியைச் சூழ்ந்து முற்றுகையிட்டனர். கல்குவாரிக்கு எதிராகக் கண்டனக் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த ஓணான் கரடு கல்குவாரி குறித்து கிராம மக்கள் தரப்பில் கூறப்படுவதாவது: சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், கடந்த மாதம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்குச் சொந்தமான வேறொரு தனியார் நிறுவனத்திற்கு இந்த கல்குவாரியை இயக்க மீண்டும் உரிமம் வழங்கப்பட்டதாகத் தெரியவந்தது என்று கூறினர்

இதுகுறித்துத் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வேறு வழியின்றி மக்கள் களத்தில் இறங்கி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கல்குவாரி செயல்படத் தொடங்கினால் அப்பகுதியின் இயற்கைச் சூழலும் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படும் என மக்கள் அஞ்சுகின்றனர். இந்த மலையைச் சார்ந்து பல நீர்நிலைகள், ஓடைகள், 7-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் மற்றும் இயற்கை நீர்ச்சுனைகள் உள்ளன. மேலும், அரிய வகை பறவைகள், பட்டுப்பூச்சிகள், ஊர்வன உயிரினங்கள் மட்டுமின்றி, வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகள் மற்றும் தொல்லியல் எச்சங்களும் இந்த மலையில் காணப்படுகின்றன. கல்குவாரி அமைந்தால் இவை அனைத்தும் முற்றிலுமாக அழிந்துவிடும் எனப் போராட்டக்காரர்கள் கவலை தெரிவித்தனர்.

போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, எழுமலை காவல் ஆய்வாளர் இளவரசு தலைமையில் 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு இந்தத் தனியார் கல்குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள கிராம மக்கள், உரிமம் ரத்து செய்யப்படவில்லை என்றால் அனைத்துக் கிராம மக்களையும் திரட்டி உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top