மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி நின்றதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தேங்கிய மழைநீரும் கழிவுநீரும் சீராக வெளியேற வழியின்றி முடங்கியிருந்த நிலையில், வாடிப்பட்டி பகுதியில் முக்கிய கழிவுநீர் வடிகால் பகுதியான ‘அமுக்கு பாலம்’ பகுதிக்குச் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம். வி. கருப்பையா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாகப் பணிகளைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட எம்.எல்.ஏ, ஜே.சி.பி இயந்திரம் மூலம் கழிவுநீர் கால்வாய்களைச் சீரமைக்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
நகர்ப் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீர் அனைத்தும் அமுக்கு பாலம் வழியாகத் தடையின்றி வெளியேறும் வகையில் கால்வாயில் அடைபட்டுள்ள கழிவுகள் மற்றும் ஆகாயத்தாமரைகள் அகற்றிச் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. எம்.எல்.ஏ-வின் இந்த உடனடி நடவடிக்கையால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்த ஆய்வின் போது, மாவட்டப் பொருளாளர் ராஜேஷ் கண்ணா, ஒன்றிய நிர்வாகிகள் வழக்கறிஞர் தியாகராஜன், தமிழன் தாமு, பேரூர் நிர்வாகி பசுமணியன், வழக்கறிஞர் அழகேசன், மதுரை மேற்கு சரவணன், கொரியர் கணேசன், கேபிள் மணி, வெல்டிங் மாரி, வார்டு செயலாளர் உமா லட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.




