மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் 80-வது சுதந்திர தின விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் மதுரை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) / துணை மேயர் நாகராஜன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, விழாவில் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மதுரை மாநகராட்சி ஆணையர் கௌரவ் குமார், ஐ.ஏ.எஸ்., மற்றும் மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.
கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து, ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மாடக்குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, வில்லாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, மறைமலை அடிகளார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் காக்கைப் பாடினியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 115 மாணவ, மாணவிகள் பங்கேற்ற வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
2025-2026 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன:
சிறந்த பள்ளிகள்: 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 13 மாநகராட்சிப் பள்ளிகள்.
சாதனை மாணவர்கள்: பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 6 மாணவ, மாணவிகள் மற்றும் பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற 11 மாணவ, மாணவிகள்.
மருத்துவச் சேர்க்கை: 7.5% அரசுப் பள்ளி உள்ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ள 2 மாணவிகள்.
என மொத்தம் 19 மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். மேலும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மதுரை மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவ அலுவலர்கள், நகர சுகாதாரச் செவிலியர்கள், மருந்தாளுநர்கள், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 2 தனியார் தொண்டு நிறுவனங்கள் என மொத்தம் 30 பேருக்கு அவர்களின் சிறந்த சேவையைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மதுரை மாநகராட்சி துணை ஆணையாளர் ஜெய்னுலாபுதீன், நகர்நல அலுவலர் மரு.அரவிந்த் ஜோதி, செயற்பொறியாளர் (திட்டம்) முரளி, மக்கள் தொடர்பு அலுவலர் நா.விஜயகுமார், உதவி ஆணையாளர்கள் மணிமாறன், தமிழரசன், உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், கல்வி அலுவலர் மோகன், மாமன்ற செயலாளர் சித்ரா, மருத்துவ அலுவலர் கோதை, உதவி செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.




