மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் நிலம் எடுப்பது தொடர்பாக கணக்கெடுக்கும் பணி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.
மதுரை விமான நிலையம் 633.17 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு, சின்ன உடைப்பு, பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சின்ன உடைப்பு கிராமத்தில் மட்டும் விரிவாக்கத்திற்காக 146 நபர்களின் வீடுகள் மற்றும் நிலங்கள் என 189 ஏக்கர் நிலம் கையகபடுத்த உள்ளதாக கடந்த 2009 ஆம் ஆண்டு அதிகாரிகள் தெரிவித்து அதற்கான பணிகளை, செய்து வந்த நிலையில் 2009 ம் ஆண்டு அப்போதைய நில மதிப்பீடு கணக்கிடப்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு பயனாளிகளுக்கு நிதி வழங்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
தற்போது, ஊருக்கு வெளியே விமான நிலைய சுற்றுச்சுவர் எழுப்பும் பணிகள் நிறைவடைந்த நிலையில்,
சின்ன உடைப்பு கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்தும் பணியை தொடங்க உள்ளதாக விமான நிலைய வட்டாரத்தில் தகவல் தெரிவித்ததால், இப்பகுதி மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை எனவும் 2009 கணக்கெடுப்பின்படி வழங்கப்பட்ட நிதியை, 2013 நில எடுப்பு சட்டப்படி கணக்கிட்டு வழங்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் கட்டமாக இழப்பீடு தொகை பெற்ற 63 நபர்களுக்கு மீள்குடி அமர்வுக்கு பெருங்குடி அருகே இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் நோட்டீஸ் வழங்கப்பட்டு வெளியேறுமாறு விமான நிலைய நில எடுப்பு வட்டாட்சியர் தெற்கு வருவாய் துறையினர் பொதுமக்களிடம் கையொப்பம் பெறப்பட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், சின்ன உடைப்பு கிராமத்தில் 250 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் 63 வீடுகளுக்கும் பொய்யான தகவல் கொடுத்து வழங்கப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து கிராம வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது.
வரும் 20ஆம் தேதி நிலம் கையகப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில் சின்ன உடைப்பு கிராமத்தில் மீண்டும் பதட்டப்பட சூழ்நிலை நிலவுகிறது இதற்காக கடந்த 13ம் தேதி மதுரை தெற்கு வட்டாட்சியர் வளர்மதி தலைமையிலான குழுவினர் வருகை தந்த போது பொதுமக்கள் கிராமத்திற்கு செல்லும் பாதையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் சின்ன வீடு கிராமத்தில் விமான நிலைய விரிவாகத்திற்காக நிலம் கையகப்படுத்தும் இடங்களை மதுரை மேலூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, தெற்கு வட்டாட்சியர் வளர்மதி, சர்வேயர் உள்ளிட்ட அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.




