நீட் தேர்வு முறைகேடு புகார்களை முன்வைத்து ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, தற்போது ‘ஜென் ஆல்ஃபா’ (2010 முதல் 2024 வரை) தலைமுறையைச் சேர்ந்த பள்ளி சிறுவர், சிறுமிகள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக தெருவில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
மின்விசிறி இல்லை, குடிநீர் இல்லை, கழிப்பறை வசதி இல்லை, போதிய ஆசிரியர்கள் இல்லை, ஏன்… பாதுகாப்பான பள்ளி கட்டிடங்கள் கூட இல்லை என்ற கோரிக்கைகளை முன்வைத்து ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் மாணவர்கள் தங்கள் குரலை உயர்த்தத் தொடங்கியுள்ளனர்.
ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் கன்வர்புரா கிராமத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தால் மாட்டு கொட்டகையில் பாடம் கேட்க வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர். சிஜெபி கட்சியின் தலையீடு மற்றும் மாணவர்கள்-கிராம மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, வரும் செப் 1 முதல் புதிய பள்ளி கட்டடம் கட்டப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
அஜ்மீரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், மாணவிகளும் பெற்றோர்களும் சேர்ந்து தலைமை ஆசிரியரின் முகத்தில் கரியைப் பூசி கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
ஜெய்ப்பூர் காது கேளாதோர் பள்ளியில் சுகாதாரமற்ற கழிப்பறைகள் மற்றும் பழுதடைந்த கட்டிடத்தைக் கண்டித்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் சைகை மொழியிலேயே போராட்டம் நடத்தினர். இதன் விளைவாகப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நீக்கப்பட்டார்.
ம.பியில் 25,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டதைக் கண்டித்து, 36 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆக 21 அன்று போபாலில் ‘பள்ளிகளைக் காப்பாற்றுங்கள்’ போராட்டத்தை நடத்தினர்.
உ.பி லக்னோவில் போதிய அறிவியல் ஆசிரியர்கள் இல்லாததைக் கண்டித்து மாணவிகள் மழையையும் பொருட்படுத்தாமல் வீதியை மறித்துப் போராடினர். உன்னாவ் மற்றும் கிஷன்பூரில் சுகாதாரமற்ற உணவு, சீரற்ற மின்சாரம் மற்றும் சட்டவிரோதக் கட்டண வசூலுக்கு எதிராக நூற்றுக்கணக்கான மாணவர்கள் வீதிக்கு வந்தனர். குக்ராபூர் பள்ளி வளாகத்தில் மரங்களை வெட்டியதற்கும் சாதிய பாகுபாட்டிற்கும் எதிராகப் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.
டில்லி பல்கலைக்கழக வரலாற்று முன்னாள் பேராசிரியர் பிரபு மொஹபத்ரா கூறுகையில், கல்விக் கொள்கை உருவாக்கத்தில் மாணவர்களை ஒரு முக்கியப் பங்காளியாகக் கருதத் தவறியதன் விளைவே இந்தப் போராட்டங்கள். அடிப்படை கட்டமைப்பு, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கற்றல் தரம் சீர்குலைந்து வருவதை இளம் தலைமுறை மாணவர்கள் இனியும் அமைதியாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதை இது காட்டுகிறது என்றார்.
சிஜெபி அமைப்பின் பள்ளிகளைச் சீரமைப்போம் இயக்கத்தைத் தொடர்ந்து, இந்திய மாணவர் சங்கமும் அரசுப் பள்ளிகளைக் காக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கக் கோரியும் நாடு தழுவிய ‘பள்ளி பச்சாவ் அந்தோலன்’ பிரச்சாரத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது




