Close
செப்டம்பர் 13, 2026 9:03 மணி

டாஸ்மாக் கடைகளில் வீடியோ எடுத்து மிரட்டல்: பணியாளர் சங்கம் குற்றச்சாட்டு

டாஸ்மாக் கடைகளில் சமூக விரோதிகள் வீடியோ எடுத்து மிரட்டுகின்றனர். அதிகாரிகள் இதை நம்பி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என பணியாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் நீதிநாயகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக, சோஷியல் மீடியாவில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இது உண்மையல்ல.

டாஸ்மாக் கடைகளில் சில சமூக விரோதிகள் வீடியோ எடுத்து, அதை மார்பிங் செய்து, கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதாக கூறி ஊழியர்களை மிரட்டுகின்றனர். மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பதாக சோஷியல் மீடியாக்களில் வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பணியாளர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கூடாது.

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அரசு நிர்ணயித்த விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்கின்றோம். சந்தேகப்படும் கடைகளை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்கலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் 155 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் குறிப்பிட்ட பள்ளிபாளையம் டாஸ்மாக் கடையில் எம்ஆர்பி விலைக்கு மதுபானம் விற்பனை செய்வதுடன் அதற்கான ரசீதும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் சோஷியல் மீடியாவில் வரும் வீடியோவை வைத்து அதிகாரிகள் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்பதை கோரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறோம். தமிழக அரசு சமீபத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்ததில் மகிழ்ச்சி அடைகின்றோம், அதே நேரத்தில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை டாஸ்மாக் ஊழியர்களை வைத்து செயல்படுத்தக் கூடாது மாற்றுப்பணியாளர்களை நியமித்து செயல்படுத்த வேண்டும்.

காலி மதுபான பாட்டிலை திரும்ப பெறுவதற்கு டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 1,000 முதல் 5 ஆயிரம் வரை செலவாகிறது, மேலும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடமும் மதுபான பாட்டில்கள் திருப்பி வாங்கும் போது குறைந்தபட்சமாக 15 நிமிடங்கள் வரை நேரம் ஆகிறது. அதனை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் மதுபானங்களை டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதவாக வீடியோ எடுத்து வெளியிட்டு மிரட்டுகின்றனர் என்று கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top