50 ஆண்டுகளுக்கு முன்பு, எனது தாயார் எங்கள் உறவுகளுக்கு முக்கிய மருத்துவர். எழுத்தறிவில்லாதவராக இருந்தாலும் காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற சாதாரணமான நோய்களுக்கு மூலிகை ரசம் வைத்துக் கொடுத்தே போக்கி விடுவார்.
காலப்போக்கில் ஆங்கில மருத்துவம் பிரபலமடைய கசாயம் எல்லாம் காணமல் போய்விட்டது. இப்போது மீண்டும் மருத்துவர் கு.ஜெயராமன் போன்றவர்களின் பரப்புரைகளால் பாரம்பரிய மருத்துவம் பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில் பி. மைக்கேல் செயராசு எழுதியுள்ள தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள் ” நூல் எளிமையாக செடிகளின்களின் மருத்துவ குணங்களை நமக்குச் செய்கிறது.
அனைத்து நோய்களையும் விஞ்சும் இஞ்சி!
இந்திய மருத்துவம் மற்றும் சமையலறையில் தவிர்க்க முடியாத பொருள் இஞ்சி. இது தண்ணீர் செழிப்பான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து வீடுகளிலும் ஞாயிற்றுக்கிழமை தோறும், இரவு படுக்கப் போகும் முன், இஞ்சி சாரெடுத்து, சுரசம் செய்து 15 மி.லி முதல் 30 மி.லி. வரை குடிக்கும் பழக்கம் இருந்தது. இஞ்சி சாரெடுத்து தெளிய வைத்து, அடியில் படியும் வெள்ளை நிற மாவுப்பொருளை நீக்க வேண்டும். பிறகு அடுப்பிலேற்றி ‘சுர்’ரென்ற சத்தம் வந்தவுடன் அடுப்பை விட்டு இறக்கி பயன்படுத்தவதுதான் ‘சுரசம்’
வாரம்தோறும் இஞ்சி சுரசம் குடித்து வருவதால், வயிற்றில் உள்ள வாய்வு, மலச்சிக்கல், வயிற்றில் தங்கிய பழைய மலம் முதலான அனைத்தும் மறுநாள் காலையில் வெளியேறி விடும். உடலும் புத்துணர்ச்சி பெறும். வயிற்றுப் போக்கு, இதய நோய்கள், தோல் நோய்கள் முதலான பெருநோய்கள் வராது.
பக். 166 – 167.
துளசி, விளா, நொச்சி, கத்திரி, கண்டங்கத்திரி, ஊமத்தை, வெள்ளறுகு, கீழாநெல்லி போன்ற செடிகளில் உள்ள மருத்துவ குணங்களையும், அதை பயன்படுத்தும் வழிமுறைகளையும் எளிமையாக எடுத்துச் சொல்கிறது இந்த நூல்
பிரண்டை, வெட்பாலை, கடற்பாலை, இளைக்கல்லி, தாமரை, அரசு, அத்தி, மஞ்சள், இஞ்சி போன்றவைகளின் குணாதிசயங்களையும் சிறப்பாக எடுத்துச் சொல்கிறது இந்த நூல்.
மேற்கண்டவற்றைத் தவிர ஏராளமான செடிகளைப் பற்றிய செய்திகள் நூலின் உள்ளே உள்ளது.
புத்தகம் கிடைக்குமிடம் :
விகடன் பிரசுரம்,
757, அண்ணா சாலை,
சென்னை. 600002
ரூ.220.
மதிப்புரை:
சா .விஸ்வநாதன் – வாசகர் பேரவை – புதுக்கோட்டை.




