Close
மார்ச் 16, 2026 11:30 காலை

நூல் விமர்சனம்: ஸ்டாலின் குணசேகரன் எழுதிய சுதந்திரச் சுடர்கள்

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன், ஈரோட்டில் தேசிய நல விழிப்புணர்வு இயக்கம் 2004ல் ஏற்பாடு செய்திருந்த, மாதம் ஒரு சொற்பொழிவு நிகழ்வில் கீழ் கண்ட தலைப்புகளில்

1.தமிழகத்தில் காந்தியடிகள்
2.விடுதலைப் போரில் முதல் முழக்கம்
3.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
4.பஞ்சாப்படுகொலை
5.விடுதலைப் போரில் தமிழ் சினிமாவும், நாடகங்களும்.
6.பெரியார் ஈ.வே.ரா
7.விடுதலைப் போரில் வீராங்கனைகள்
8.சி. சுப்பிரமணிய பாரதி
9.விடுதலைப் போரில் சிறைச்சாலைக் கொடுமைகள்
10.ஆகஸ்ட் புரட்சி
11.மாவீரன் பகத்சிங்
12.விடுதலைப் போரில் வ.உ.சிதம்பரம்பிள்ளை
13,ஜி. சுப்பிரமணிய ஐயர்
14.கடற்படை எழுச்சி
15.விடுதலைப் போரில் தமிழ் இதழ்கள்

என 15 மாதங்கள் இடைவெளியின்றி நிகழ்த்திய சொற்பொழிவுகளின் தொகுப்பே “சுதந்திரச் சுடர்கள் “.

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கினை, தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகத்தினை, அறியப்படாமல் இருந்த தியாகச் சுடர்களை ஸ்டாலின் குணசேகரன் அளவிற்கு வேறு யாரும் தேடிக் கண்டு பதிவு செய்ததாகத் தெரியவில்லை.

அதற்கு, 5 ஆண்டுகள் செலவிட்டு கள ஆய்வு செய்து ஆவணப்படுத்திய “விடுதலைப் வேள்வியில் தமிழகம்” இரண்டு தொகுதிகள் சான்று.

சுதந்திரச் சுடரில் உள்ள ஒவ்வொரு உரைகளும் ஒரு தகவல் களஞ்சியம். இந்த உரைகள் வாசிப்பவர்கள் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி கூடுதலாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவனவாக உள்ளது உரையின் சிறப்பு.

தென்னாப்பிரிக்காவில் காந்தியின் சத்தியாக்கிர போராட்டத்தில் பங்கேற்ற தில்லையாடி வள்ளியம்மை தொடங்கி நூற்றுக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களை வீராங்கனைகளை ஸ்டாலின் அவர் உரை வீச்சின் வழி நம் கண்முன்னே அவர்களின் தியாகங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார்.

“சுதந்திரச் சுடர்கள் ” ஒவ்வொருவரும் தவறாமல் வாசிக்க வேண்டிய நூல். இது நுகர்வுக் கலாச்சாரத்தின் முற்றுகையில் சுயநலமாகவே சிந்தித்து வாழப்பழகி விட்ட நம்மை , சமூக நேயத்துடன் சக மனிதர் துயர் துடைக்கவும், சுதந்திரக் காற்றை இந்த மண் என்றும் சுவாசிக்கவும், சென்ற தலைமுறை செய்திருக்கும் தியாகங்களைத் திரும்பிப் பார்க்கவும், சிறிதளவாவது பொது நலன் சார்ந்து அவர்களைப் போன்று செயற்படவும் நிச்சயம் மாற்றி அமைக்கும்” என்று தமிழருவி மணியன் இந்த நூலுக்கு எழுதியிருக்கும் அணிந்துரையில் குறிப்பிடுகிறார்.

ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் சுதந்திரச் சுடர்கள்.

நூல் கிடைக்குமிடம்:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், புதுக்கோட்டை

04322-227773

புத்தகத்தின் விலை: ரூ.600/-

புத்தக விமர்சனம்:

பேராசிரியர் எஸ். விஸ்வநாதன், வாசகர் பேரவை / புதுக்கோட்டை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top