தினமணி மாணவர் மலர் 26 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. நானும் ஆண்டுதோறும் தவறாமல் வாங்கிவிடுவேன். ஒரு ஐந்தாண்டுகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளும் கிடைக்கும் வகையில் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் மலரை வாங்கி வழங்கியிருக்கிறேன்.
இரண்டாண்டுகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் வழங்கினோம். இப்போது இயலவில்லை. மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்த மலரை நண்பர்கள் வாங்கி அருகில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கலாம்.
முன்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில இளைஞர் மணி என்று ஒரு இணைப்பு வந்து கொண்டிருந்தது. அதை கொரோனா சாப்பிட்டுவிட்டது. இப்போது இந்த புத்தகம் உதவுகிறது.
இந்த ஆண்டு மாணவர் மலரில் ஸ்டெம் (Science, Technology, Engineering, Mathematics=STEM) கல்வியின் சிறப்பைப் பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. வல்லுனர்களின் கருத்துகளும் இடம்பெற்றிருக்கிறது. உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களே! உங்களுடன் சில சொற்கள் என்ற அருமையான தொரு வழிகாட்டுதலைத் தந்துள்ளார் டாக்டர் எம்ஜிஆர் .மருத்துவப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் சுதா சேஷைய்யன்.
இப்பொழுது பரவலாகப் பேசப்படுகிற செயற்கை நுண்ணறிவைப்பற்றி (Artificial Intelligence) மேனாள் தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் ம.இராஜேந்திரன் விரிவாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
மருத்துவக் கல்வி, தொழிற்கல்வி, வேளாண் படிப்புகள், சட்டக் கல்வி, கடல்சார் படிப்புகள், தொல்லியல் சார்ந்த படிப்புகள் என்று அனைத்து படிப்புகளைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் இம்மலரில் உள்ளது. உயர்கல்வி பயில விரும்புபவர்கள் போட்டித் தேர்வைத் தவிர்க்க இயலாது.
என்னென்ன போட்டித் தேர்வுகளை, என்னென் படிப்புகளுக்கு எழுதவேண்டும் .அதைப்பற்றி முழுமையான விபரங்கள் இதில் உள்ளது. அதேபோல எங்கு என்ன படிக்கலாம் என்ற விபரங்களும் விரிவாகத் தரப்பட்டிருக்கிறது. ஐ.ஐ.டி., ஐ பற்றிய விரிவான தகவல்களும் இதில் உள்ளது.
ஆசிரியர்கள் வாங்கிப் படித்தால் மாணவர்களின் எதிர்காலத் திற்கு நல்வழி காட்டலாம். பெற்றோர்கள் வாங்கினால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக்கலாம். விலை 90 ரூபாய்.
–பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை–




