Close
செப்டம்பர் 20, 2024 4:10 காலை

வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நெருக்கடி: வங்கி பணியாளர் சங்கம் புகார்

ஈரோடு

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் மத்தியில் உரையாற்றிய மாவட்ட செயலாளர் எஸ்.எம்.மேசப்பன்

நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள    வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை தேவையற்ற வாகனங்களை வாங்க வேண்டுமென கட்டாயப்படுத்துவதாக கூட்டுறவு வங்கி பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.மேசப்பன், மாவட்டத் தலைவர் கே.அன்பரசன் ஆகியோர் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு சூரம்பட்டியில் உள்ள கூட்டுறவு இணைப் பதிவாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.மேசப்பன் கூறியதாவது:தமிழகம் முழுவதும் உள்ள 450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் எம்எஸ்சி/ ஏ.ஐ.எப் திட்டத்தின் கீழ் பல்நோக்கு சேவை மையம் இயங்கி வருகின்றன.

ஈரோடு
மனு அளிக்கும் நிகழ்வில் பங்கேற்ற பணியாளர்கள்

கூட்டுறவு கடன் சங்கங்களில் பல்வேறு விதமான தேவையற்ற வாகனங்களையும் உபகரணங்களையும் வாங்குமாறு கூட்டுறவுத் துறை வற்புறுத்தி வருகிறது. விவசாயிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்கள் கடன் தள்ளுபடியால் கடும் நிதி நெருக்க டிகளுக்கு ஆளாகி தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

வங்கிப் பணிகளை மட்டுமே மேற்கொண்டு வரும் கூட்டுறவு கடன் சங்கங்களை லாரி போன்ற கனரக வாகனங்களை வாங்கி பயன்படுத்துமாறு கூறுவது ஏற்புடையது அல்ல.

ஏற்கெனவே கனரக வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வரும் நபர்கள் டீசல் விலை உயர்வு, வாகனங்களை இயக்குவதற்கு போதிய ஓட்டுனர் இல்லாத காரணங்களால் தாங்கள் செய்து வரும் தொழிலை அடியோடு நிறுத்தி விட்டனர். பல மாவட்டங்களில் இது போன்ற தொழிலை செய்தவர்கள் அதனை கைவிட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டனர்.

கடந்த நிதி ஆண்டில் லாரி, பிக்கப் வேன், டாட்டா, ஐஷர் டிராக்டர் வாங்க வற்புறுத்துவதை முற்றிலும் கைவிட வேண்டுமென ஈரோடு மாவட்டத்தில் உள்ள எங்கள் தொழிற்சங்கத்தை சேர்ந்த 147 கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் மற்றும் அனைத்து அலுவலக பணியாளர்கள் சார்பில் ஈரோடு கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

ஈரோடு

இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் ஏற்கனவே வாங்கியுள்ள உபகரணங்கள் மற்றும் வாகனங் களை இணைப்பதிவாளர் அலுவலகத்தில் வரும் அக்டோபர் 3 -ஆம் தேதி ஒப்படைப்பது என்றும், அதனைத்தொடர்ந்து சங்க அலுவலக பணியாளர்கள் மற்றும் நியாய விலை கடை பணியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்த தொடர் விடுப்பில் செல்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட உள்ளது.

சிறப்பாக செயல்பட்டு வந்த வீட்டு வசதி சங்கங்கள் மற்றும் நிலவள வங்கிகள் இதுபோன்ற தேவையற்ற திட்டங்களை அமல்படுத்தியதால் கடும் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இத்திட்டங்களை கைவிடாவிட்டால் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களையும் மூடு விழா நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றனர்.

முன்னதாக சங்கத்தின் மாவட்ட பொருளாளர் செங்கோட்டை யன், துணைத் தலைவர்கள் மாரிமுத்து அருணாச்சலம் , இணைச்செயலாளர்கள் சாரதா மணி, ரமேஷ் மற்றும்  தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் களும் அலுவலக ஊழியர்களும் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top