நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சயொயர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தனியார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.
இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேனேஜர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், அக்கவுண்டண்ட், கேஷியர், டைப்பிஸ்ட், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டெண்ட் போன்ற பணிகளுக்கு தேர்வுசெய்யவுள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், தேர்ச்சி பெறாதவர், 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்பட்டி, ஐடிஐ பயிற்சி மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவும் ஆலோசனையும் வழங்கப்படும். வேலையளிப்போரும், வேலை நாடுநர்களும் tnprivatejobs.tngov.in என்ற வெப்சைட்டில் பதிவு செய்திட வேண்டும்.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அனைவரும் வருகின்ற 19ம் தேதி, காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




