பிரிட்டன் மற்றும் இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்திய பிரதமர் மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் கையெழுத்தானது.
2 நாட்கள் பயணமாக லண்டன் வந்தடைந்த பிரதமர் மோடியை இங்கிலாந்தை சேர்ந்த உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மரை பிரதமர் மோடி இன்று சந்தித்தபோது இரு தரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
பின்னர், இரு நாடுகளின் பிரதமர்கள் முன்னிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எஃப்.டி.ஏ என அழைக்கப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பிரிட்டன் அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் தோல், காலணிகள், ஜவுளிகள் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும். மறுபுறம், பிரிட்டனில் இருந்து ஏற்றுமதியாகும் விஸ்கி, ஜின், குளிர்பானங்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வேளாண் பொருட்களின் மீதான வரியும் குறைக்கப்படும்.
- இந்திய ஜவுளிப் பொருட்களுக்கு இறக்குமதி வரி பிரிட்டனில் 8 முதல் 12 சதவீதமாக உள்ளது. இதனை பிரிட்டன் அரசு நீக்க முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
- இந்தியாவில் இருந்து வரும் தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு வரி குறைக்கப்படும்.
- இதே போல், பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் விஸ்கிகளுக்கான வரியை 150-ல் இருந்து 30 சதவீதமாக குறைக்க இந்தியா முன் வந்துள்ளது.
- இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களுக்கான வரியை பிரிட்டன் குறைப்பதால் சென்னை, புனே மற்றும் குருகிராம் உள்ளிட்ட பகுதிகள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியர்களுக்கான விசா நடைமுறைகளையும் பிரிட்டன் எளிமையாக்கியுள்ளதால் இந்தியாவில் இருந்து இன்ஜினியர்கள், ஆடிட்டர்கள் உள்ளிட்டோர் பிரிட்டன் செல்வதில் சிரமங்கள் இருக்காது.
- இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு வரிச்சலுகை அளிக்க பிரிட்டன் முன் வந்துள்ளது.
- பாசுமதி அரிசி, தேயிலை மற்றும் நறுமண மசாலாப் பொருட்களின் இறக்குமதி வரியையும் பிரிட்டன் குறைக்கவுள்ளது.
- ரசாயன பொருட்களுக்கும், பிளாஸ்டிக் பொருட்களுக்கும் பிரிட்டன் வரியை குறைப்பதால் ஏற்றுமதியாளர்கள் பயன் அடைவர்.
- இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளான சோலார் திட்டங்கள், ஹைட்ரஜன் மற்றும் மின் வாகன தயாரிப்புகளில் அதிக முதலீடுகள் செய்ய பிரிட்டன் முன் வந்துள்ளது.
- இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட் போன்கள், ஆப்டிகல் பைபர் கேபிள்கள், இன்வெர்டெர்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு பிரிட்டன் வரிகளை முற்றிலுமாக ரத்து செய்துள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி கூறுகையில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியா – பிரிட்டன் இடையேயான உறவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இரு நாடுகளின் பொருளாதாரத்திலும் பன்மடங்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மேலும், இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒத்துழைப்பு, முதலீடு, தொழில்நுட்பம், கல்வி, ஆராய்ச்சி, சுகாதாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்தும் என்று கூறினார்.




