Close
மார்ச் 7, 2026 1:15 மணி

மனநலம் என்பது வாழ்வின் அடிப்படை அங்கம்: உலக மனநல தினத்தில் பிரதமர் மோடி

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 10-ஆம் தேதி உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக மனநல கூட்டமைப்பின் முன்முயற்சியால், இந்த தினம் முதன்முதலில் 1992-ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.

நடப்பாண்டிற்கான கருப்பொருள், மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் மனநலம் மற்றும் உளவியல் சமூகத் தேவைகளுக்கு உடனடியாக ஆதரவு அளிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

உலக மனநல தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, மனநலம் என்பது நம்முடைய ஒட்டுமொத்த நல்வாழ்வின் அடிப்படை அங்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, சமூக ஊடகமான எக்ஸ்-ல் பிரதமர் மோடி தனது செய்தியில், வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகில், உலக மனநல தினம் என்பது மனநலனைப் பற்றி சிந்திப்பதற்கும், ஒருவருக்கு ஒருவர் கருணை காட்டுவதற்கும் ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக அமைகிறது. மனநலம் தொடர்பான விவாதங்களைச் சமூகத்தின் முக்கிய நீரோட்டத்திற்குக் கொண்டுவர அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

“மனநலன் குறித்த விவாதங்கள் சாதாரணமாகப் பேசப்படும் சூழல்களை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம். இந்தத் துறையில் உழைத்து, மற்றவர்களுக்கு ஆறுதல் அளித்து, மகிழ்ச்சியைக் கண்டறிய உதவும் அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இயற்கைப் பேரிடர்கள், மோதல்கள் மற்றும் பொது சுகாதார அவசரநிலைகள் போன்ற நெருக்கடிகள் உணர்ச்சி ரீதியான துன்பத்தை ஏற்படுத்துகின்றன. ஐந்தில் ஒருவருக்கு மனநலப் பாதிப்பு ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

நெருக்கடிகளின் போது தனிநபர்களின் மனநலத்திற்கு ஆதரவளிப்பது வெறும் முக்கியமானது மட்டுமல்ல, அது உயிர்களைக் காப்பாற்றுகிறது. மேலும், தனிநபர்களாக மட்டுமல்லாமல் சமூகங்களாகவும் குணமடைந்து மீண்டெழவும், வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் அவர்களுக்கு பலத்தை அளிக்கிறது.

இந்த உடனடித் தேவையை எதிர்கொள்ள, அரசு அதிகாரிகள், சுகாதார மற்றும் சமூகப் பராமரிப்பு வழங்குநர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் சமூகக் குழுக்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைவது அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top