Close
மார்ச் 7, 2026 1:40 மணி

பனிச்சிறுத்தையின் தோழிகள்: இமயமலையின் பெண்களின் சாதனை

கிப்பர் கிராமம், இமாச்சலப் பிரதேசத்தின் குளிர்ந்த ஸ்பிட்டி பள்ளத்தாக்கில்  நான்கு லட்சம் அடிகள் உயரத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமம். இந்த மலைகளில் வாழும் மக்களுக்குப் பனிச்சிறுத்தை என்பது ஒருகாலத்தில் வில்லனாகவே இருந்தது.

இந்த கிராமத்து மக்கள் வளர்க்கும் கால்நடைகளை பனிச்சிறுத்தைகள் இரவில் தாக்கி தனக்கு உணவாக்கிக் கொள்ளும். ஒரு இரவில் நான்கு அல்லது ஐந்து ஆடுகளை இழப்பது இங்குச் சாதாரணமாக இருந்தது. அதனால், பனிச்சிறுத்தைகளைப் பாதுகாக்க வேண்டிய ஒன்றாக அல்லாமல் அதை ஒரு பிரச்சினையாகவே மக்கள் பார்த்தார்கள்.

மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையில் இருந்த இந்த முரண்பாடு, இந்தக் கிராமத்தின் அமைதியை அடிக்கடி குலைத்தது.

லோப்சாங் யாங்சென்  என்ற 31 வயதுப் பெண்மணி இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர். சிறு வயதில் ஆடு, மாடுகளைத் தாக்க வரும் பனிச்சிறுத்தைகளைப் பற்றிய கதைகளைக் கேட்டே வளர்ந்தவர் அவர். திருமணத்திற்குப் பிறகு கிப்பருக்கு வந்தபோதுதான், அந்தக் கதைகள் உண்மை என்பதை தெரிந்து கொண்டார்.

இந்தச் சூழலில்தான், வனத்துறையும், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையும் பனிச்சிறுத்தையைப் பாதுகாக்கும் முயற்சியில் கிராம மக்களை இணைக்கத் தொடங்கின. முதலில் தங்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு விலங்கை ஏன் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் கேட்டார்கள். ஆனால், தங்களின் ஆடுகள் அவற்றின் உணவு; அவை உயிர்வாழ உணவு தேவை என்பதை விரைவில் கிராம மக்கள் புரிந்துகொண்டனர்

இந்தத் திட்டத்தில், லோப்சாங் தன்னார்வலராகச் சேர முடிவு செய்தார். லோப்சாங் தலைமையில், 11 பெண்கள் அடங்கிய ஒரு குழு உருவானது. கம்ப்யூட்டரைப் பார்த்தே இராத அந்தப் பெண்களுக்கு அடிப்படை ஆங்கிலமும், கம்ப்யூட்டர் பாடங்களும் பயிற்சி அளிக்கப்பட்டன.

பனிச்சிறுத்தை கணக்கெடுப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் கிப்பர் கிராமத்தின் இந்த கம்ப்யூட்டர் அறிவு இல்லாத பெண்கள் குழுதான் முக்கியப் பங்காற்றியது:

அவர்களின் பொறுமையும், துல்லியமும் விஞ்ஞானிகளை வியக்க வைத்தது. அவர்கள் மலையின் பல பகுதிகளில் வைக்கப்பட்ட கேமராக்களில்  பதிவான 8,00,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்து, பனிச்சிறுத்தைகளைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்தக் குழுவின் உழைப்பால், இதற்கு முன் மூன்று ஆண்டுகள் எடுத்த கணக்கெடுப்பு பணி, இம்முறை ஒரே ஆண்டில் முடிந்தது. இந்தக் கணக்கெடுப்பின் முடிவில், இமாச்சலப் பிரதேசத்தில் 83 பனிச்சிறுத்தைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது இந்த எண்ணிக்கை 2021-ல் 51 ஆக இருந்தது.

இந்தக் கணக்கெடுப்பு, அறிவியல் அறிவையும், கிராம மக்களின் பாரம்பரிய அறிவையும் இணைத்து, பனிச்சிறுத்தைகளின் வாழ்விடத்தைக் காப்பாற்றும் ஒரு நிலையான மாதிரியாக உருவெடுத்தது. வனத்துறையும் கிராம மக்களுடன் நம்பிக்கையைக் கட்டியெழுப்பத் தொடங்கியது.

இப்போது, பனிச்சிறுத்தையைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள்தான் இந்தக் கிராம மக்களின் முக்கிய வருமான ஆதாரம். அவர்கள் இந்த அற்புதமான விலங்கைப் பார்க்க வருகிறார்கள். எனவே, பாதுகாப்பும், வாழ்வாதாரமும் இப்போது ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துவிட்டன.

வன அதிகாரிகள் சாலை சீரமைப்பு, சிறிய பிரச்சினைகள் மற்றும் கழிவு மேலாண்மை போன்ற அன்றாட விஷயங்களில் உதவி செய்தனர். அதற்குப் பதிலாக, மக்கள் வனவிலங்குகளைப் பாதுகாக்க உதவினார்கள்.

இந்த ஒத்துழைப்பு காரணமாக ஸ்பிட்டி பள்ளத்தாக்கு  யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற ‘குளிர் பாலைவன உயிர்க்கோள இருப்புப் பகுதியாக’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இது, புத்த கலாச்சாரத்தின் தாக்கத்தால், அமைதியான சகவாழ்வு மற்றும் வன்முறையற்ற வாழ்வோடு இந்த மக்கள் இயற்கையோடு கொண்டிருக்கும் ஆழமான பிணைப்பைக் காட்டுகிறது.

இதன் மூலம்  பனிச்சிறுத்தைகள் மட்டுமல்லாமல், பாலாஸ் பூனை மற்றும் கம்பளி பறக்கும் அணில் போன்ற அரிதான இனங்களும் பாதுகாக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பனிச்சிறுத்தையை எதிர்காலத்துக்காகப் பாதுகாப்பது, அவர்களின் கூட்டுப் பொறுப்பாக மாறியுள்ளது.

இது குறித்து லோப்சாங் கூறுகையில், “நான் லோசாரில் குழந்தையாக இருந்தபோது, பனிச்சிறுத்தையைப் பற்றி வெறும் கதைகளை மட்டுமே கேட்டேன். ஆனால், இப்போது நாங்கள் எடுத்த முயற்சி காரணமாக, எங்கள் குழந்தைகள் அதன் புகைப்படங்களை நிஜமாகப் பார்க்க முடிகிறது. இதுதான் மாற்றம்”. என்றார்

கிப்பர் கிராமப் பெண்கள், பணம் மற்றும் நவீன வசதிகளுக்காக வெளி நிறுவனங்களை நம்பாமல், தங்கள் கைகளாலேயே தங்கள் வனவிலங்கின் எதிர்காலத்தை எழுதி, இந்தியா முழுமைக்கும் ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top