Close
மார்ச் 7, 2026 2:50 மணி

கோர்ட்டில் கன்னட மொழி பயன்படுத்தப்படுவது எப்படி நின்று போனது?

பல ஆண்டுகளாக ஐகோர்ட்டில் அலுவல் மொழியாக கன்னடத்தை பயன்படுத்த கர்நாடகா அனுமதி கோரி வருகிறது. இருப்பினும், நீதித்துறை அமைப்பு முழுவதும் சீரான தன்மை மற்றும் தெளிவைப் பராமரிப்பது குறித்த கவலைகளைக் காரணம் காட்டி சுப்ரீம் கோர்ட் மீண்டும் மீண்டும் நிராகரித்துள்ளது.

இந்நிலையில் கன்னடம் அதிகாரப்பூர்வ மாநில மொழியாக இருந்தாலும்  ஐகோர்ட்டில் கன்னட மொழியின் பயன்பாடு எவ்வாறு குறைந்தது மற்றும் அது ஏன் இப்போது ஒரு போராட்டத்தின் மூலம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து பேராசிரியர் சி. எஸ் யோகானந்தா விளக்கமளித்துள்ளார்

ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி நிட்டூர் ஸ்ரீனிவாச ராவ் அவர்கள், கன்னட மொழி மீண்டும் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று போராட்டங்கள் நடந்தபோது, ஒரு கருத்தை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியது: நான் வழக்கறிஞராகப் பயிற்சி செய்ய ஆரம்பித்தபோது, கோர்ட்டில் வாதங்கள் கன்னடத்தில்தான் நடந்தன. தீர்ப்புகளும் கன்னட மொழியில்தான் எழுதப்பட்டு வைக்கப்பட்டன. அப்படியிருக்க, கன்னடத்தை மீண்டும் கோர்ட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று இப்போது ஏன் இவ்வளவு வலுவான போராட்டங்கள் நடத்த வேண்டியிருக்கிறது என்று ஆச்சர்யமாக உள்ளது என கூறினார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்பதை பற்றி பேராசிரியர் யோகானந்தா கூறுகையில்,  டைப்ரைட்டர் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, கோர்ட் நடவடிக்கைகள் மற்றும் தீர்ப்புகள் பெரும்பாலும் கன்னடத்தில் வழங்கப்பட்டன. பின்னர் அதிகாரப்பூர்வ பதிவுகளுக்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.

டைப்ரைட்டரின் வருகை ஒரு முக்கியமான மாற்றத்திற்கு வழிவகுத்தது. இந்தியா முழுவதும் ஐகோர்ட்களில் ஆங்கிலத்தில் அனைத்து நடவடிக்கைகளை ஆவணப்படுத்துவது எளிதாக இருந்தது.

முதல் சில வருடங்களில், தீர்ப்புகள் முதலில் கன்னட மொழியில் வழங்கப்பட்டன. பின்னர் அவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, டைப் செய்யப்பட்டு ஃபைல் செய்யப்பட்டன.

அதன் பிறகு, அந்த நடைமுறையை நீக்கிவிட்டு, தீர்ப்புகளை நேரடியாக ஆங்கிலத்திலேயே டைப் செய்து வழங்கத் தொடங்கினர். இது இறுதியில் அதிகாரப்பூர்வ கோர்ட் பதிவுகளுக்கு கன்னடத்தைப் பயன்படுத்தும் நடைமுறையை மறையச் செய்தது.

கன்னட மொழிக்கு என்று ஒரு டைப்ரைட்டரை உருவாக்க விரும்பியபோது, கன்னட மொழிக்காக டைப்ரைட்டர் உருவாக்கப்படுவதற்கு, சுமார் 40 முதல் 50 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்தத் தொழில்நுட்ப மாற்றத்தினால் ஏற்பட்ட இடைவெளியே, கன்னட மொழி கோர்ட் பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டதற்குக் காரணமாக அமைந்தது

ஆகவே, ஒரு தொழில்நுட்ப மாற்றத்திற்குத் தக்கவாறு உரிய நேரத்தில் கன்னட மொழிக்குரிய கருவிகள் கிடைக்காததே, கோர்ட்களில் கன்னடம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஆங்கிலம் நிரந்தரமாக நிலைபெற்றதற்குக் காரணம் என்று பேராசிரியர் யோகானந்தா கூறினார்

சுப்ரீம்கோர்ட்  மற்றும் ஐகோர்ட்களில் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. பிரிவு 348(2) ஒரு மாநில கவர்னர் தனது ஐகோர்ட் நடவடிக்கைகளில் ஒரு மாநிலமொழியைப் பயன்படுத்துவதை ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அங்கீகரிக்க அனுமதிக்கிறது, ஆனால் இது தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளுக்குப் பொருந்தாது.

சமீபத்திய ஆண்டுகளில், நீதித்துறை அமைப்பில் கன்னடம் உள்ளிட்ட மாநில மொழிகளின் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சட்டத் தகவல்களை பொதுமக்களுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்வதற்காக, சுப்ரீம் கோர்ட் ஐகோர்ட்களுடன் இணைந்து தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்த்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top