டில்லியில் உள்ள தேசிய காவல் நினைவிடத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,. நாட்டின் சேவைக்காக உயிர்த் தியாகம் செய்த வீரமிக்க காவலர்களுக்கு அவர் மரியாதை செலுத்தி, அவர்களின் உயரிய தியாகத்தைப் பாராட்டினார்.
ஒவ்வோர் ஆண்டும் அக் 21ம் தேதி, பணியின்போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
1959ம் ஆண்டு அக் 21 அன்று, லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் சீனப் படையினரின் தாக்குதலில் பத்து துணிச்சலான காவலர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். இந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையிலேயே இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் பேணுவதில் காவல்துறையின் தியாகங்களைப் போற்றும் விதமாக, 2018ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தேசிய காவல் நினைவிடம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
டில்லியில் உள்ள தேசிய காவல் நினைவிடத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: ராணுவமும் காவல்துறையும் நாட்டின் பாதுகாப்பின் தூண்கள். எல்லை தாண்டி வரும் எதிரியாக இருந்தாலும் அல்லது நம்மிடையே மறைந்திருக்கும் நபராக இருந்தாலும், இந்தியாவின் பாதுகாப்புக்காக நிற்கும் ஒவ்வொரு தனிநபரும் ஒரே உணர்வைக் கொண்டிருக்கிறார்கள். ராணுவத்திற்கும் காவல் துறைக்கும் வெவ்வேறு அமைப்புகள் இருந்தாலும், தேசிய பாதுகாப்பு என்ற குறிக்கோள் ஒன்றுதான்.
போலீசார் குற்றங்களை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்லாமல், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதிலும் சிறப்பாகச் செயல்படுவதாக அவர் கூறினார்




