Close
மார்ச் 7, 2026 11:28 காலை

இனி வெள்ளி நகைகளை அடகு வைத்து கடன் பெறலாம்!

தங்க நகைகளை வங்கிகளில் அடகு வைத்து தங்க நகைக் கடன் பெறுவது போல, வெள்ளி நகைகளையும் இனி வங்கிகளில் வைத்துக் கடன் பெறலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாள்தோறும் தங்கத்தின் விலையைப் போல வெள்ளி விலையும் உயர்ந்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வெள்ளி தொடர்பான ரிசர்வ் வங்கி அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. தங்கத்தைப் போலவே இனி மக்கள் வெள்ளியையும் உடனடி நிதித் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்

இந்தியாவில் அனைத்து குடும்பத்திலும் இருக்கும் தங்கத்தின் மதிப்பு 34,600 டன்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவு, உலகிலேயே, வேறு எந்த நாட்டின் மத்திய வங்கியும் தன்னுடைய கையிருப்பில் வைத்திருக்கும் ஒட்டுமொத்த தங்கத்துக்கும் ஈடாகாது.

இந்தியாவின் கலாசாரத்தில் தங்க நகைகளுக்கும், தங்க சேமிப்பும் தொடர்ந்து வரும் நிலையில், இனி அதனுடன் வெள்ளியும் இணைந்து கொள்ளும்.

இதுவரை வெறும் சொத்து மதிப்பாக மட்டுமே வெள்ளி கருதப்பட்டு வந்த நிலையில், இதுவும் இனி அவசரத் தேவைக்கு உதவும். இந்த நடைமுறை வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

வங்கிகள் அல்லது அங்கீகாரம் பெற்ற நிதி நிறுவனங்களில் தங்கம் போல இனி வெள்ளியை நகைகளைக் கொடுத்து கடன் பெற முடியும்.

ஒரு தனிநபருக்கு 10 கிலோ வெள்ளி நகைகள் வரையிலும் என்ற அதிகபட்ச வரம்பும், வெள்ளி நாணயங்கள் என்றால் 50 கிராம் என்ற அதிகபட்ச வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதத்தை கடனாகப் பெற முடியும் என்பது போல வெள்ளியின் 75 சதவீத மதிப்புத் தொகையை கடனாகப் பெறலாம்.

கடன் மதிப்பு மற்றும் வெள்ளியின் மதிப்புக்கான விதிமுறைகளில், ரூ.2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு வெள்ளியின் மதிப்பில் 85 சதவிகிதம் வரையிலும், ரூ.2.5 முதல் ரூ.5 லட்சத்திற்கு வெள்ளியின் மதிப்பில் 80 சதவிகிதம் வரையிலும் ரூ.5 லட்சத்திற்கு மேல் வெள்ளியின் மதிப்பில் 75 சதவிகிதம் வரையிலும் கடன் வழங்கலாம் என்று அறிவித்துள்ளது.

அதே வேளையில், வெள்ளி நாணயங்கள் மற்றும் நகைகளை மட்டுமே வைத்து கடன் பெற முடியும் என்றும், வெள்ளிக் கட்டிகள், ஆன்லைன் வெள்ளி முதலீடுகளுக்கு நிகராகக் கடன் பெற முடியாது என்றும் விளக்கம் கொடுத்துள்ளது.

தனிநபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இனி அவசர நிதித் தேவைக்கு வெறும் தங்கத்தை மட்டும் நம்பியில்லாமல், வெள்ளிப் பொருள்களைப் பயன்படுத்தலாம் என்பது வரவேற்கத்தக்கது.

தங்கம் போன்று அல்லாமல், வெள்ளிப் பொருள்கள் பெரிதாக இருப்பதால், அதிகளவில் வெள்ளியைக் கொடுத்தால்தான், ஒரு சிறு தொகையாவது கடனாகக் கிடைக்கும். மேலும் நிதி நிறுவனங்கள், தங்களது சேமிப்புப் பெட்டகங்களில் வைப்பதற்கும் வசதியின்மை மற்றும் அதிக இடத்தைப் பிடித்துக் கொள்ளும் என்ற காரணங்களால் வெள்ளியை வைத்து இதுவரை கடன் வழங்கவில்லை. ஆனால், 2025ஆம் ஆண்டு வெள்ளி விலை கடுமையான உயர்வை சந்தித்து, வங்கிக் கடன் பெறும் அளவுக்கு மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top