Close
மார்ச் 7, 2026 12:06 மணி

இணைய மோசடியில் மகளின் கல்விக்காக முதலீடு செய்த ரூ. 38 லட்சத்தை இழந்த சோகம்!

தனது மகளை வெளிநாட்டில் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவுடன் முதலீட்டில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த சமையல்காரர் ஒருவர், சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி ரூ. 38 லட்சம் பணத்தை இழந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த மோசடி, சமூக ஊடகங்களில் ஒரு சாதாரண ‘லைக்’ மூலம் தொடங்கி, போலியான இணையதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பல வாரங்களாக அரங்கேற்றப்பட்டுள்ளது. இவரைப் போலவே, கடந்த ஆறு மாதங்களில் நாடு முழுவதும் சுமார் 30,000 பேர், இது போன்ற முதலீட்டு மோசடிகளால் ரூ. 1,500 கோடிக்கும் மேல் பணத்தை இழந்துள்ளனர் என்று மத்திய அரசின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உத்தரகாண்டில் பணியாற்றும் டெல்லியைச் சேர்ந்த சமையல்காரர் சுமித் குமார், தனது ஓய்வு நாட்களில் முதலீட்டு வீடியோக்களைப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஜூன் மாதம், ஒரு நிதி ஆலோசகர் குறித்த ஃபேஸ்புக் வீடியோவை அவர் ‘லைக்’ செய்ததே இந்தச் சங்கிலித் தொடர் மோசடிக்கு ஆரம்பப்புள்ளியாக அமைந்தது.

குமார் ‘லைக்’ செய்த சில நிமிடங்களிலேயே, ‘அஞ்சலி சர்மா’ என்ற பெயரில் ஒரு வாட்ஸ்அப் செய்தி வந்தது. இந்தியாவில் பிரபலமான செல்வ மேலாளரான கரண் பகத்தின் ‘360 ONE WAM’ நிறுவனத்திலிருந்து அழைப்பதாக அந்த பெண் கூறினார். ஆரம்பத்தில் புறக்கணித்த குமார், கரண் பகத் பற்றிய தகவல்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுவில் ‘950% லாபம்’ ஈட்டியதாகப் பகிரப்பட்ட போலியான ஸ்கிரீன்ஷாட்களால் ஈர்க்கப்பட்டார்.

மோசடி கும்பல், அசல் ‘360 ONE WAM’ நிறுவனத்தின் இணையதளம் போலவே தோற்றமளிக்கும் ஒரு போலி இணையதளத்தை உருவாக்கி, அதில் சுமித் குமாரை தனது ஆதார் மற்றும் பான் அட்டைகளை பதிவேற்றம் செய்ய வைத்தனர். மேலும், சந்தை ஒழுங்குமுறை அமைப்பான ‘செபி’-யின் போலியான பதிவு எண்ணையும் அந்த இணையதளம் கொண்டிருந்தது, இதனால் குமாருக்கு எந்தவித சந்தேகமும் வரவில்லை.

பின்னர் அவர் சுமார் 45 பேர் கொண்ட ஒரு வாட்ஸ்அப் குழுவில் சேர்க்கப்பட்டார். அதில் இருந்த மற்ற உறுப்பினர்கள் அனைவரும் லாபம் ஈட்டுவது குறித்துச் செய்திகளைப் பகிர்ந்துள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட சில பங்குகளை வாங்கவும் விற்கவும் குழுவில் தினசரி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. முதலில் ரூ. 2 லட்சம் முதலீடு செய்த குமார், சில நாட்களிலேயே தனது கணக்கில் 20% லாபத்தைக் கண்டார் (இது முழுக்க முழுக்க போலி இணையதளத்தில் காண்பிக்கப்பட்டது). லாபத்தைக் கண்டு பேராசைப்பட்ட அவர், தனது மனைவியிடம் கடன் வாங்கியும், ரூ. 25 லட்சம் தங்கக் கடன் பெற்றும், மொத்தமாக ரூ. 38 லட்சம் முதலீடு செய்தார்.

ஜூலை 10 அன்று, சுமித் குமாரின் போலிக் கணக்கில் அவரது முதலீட்டின் மதிப்பு ரூ. 3.4 கோடியாக உயர்ந்ததைக் காட்டியது. அதில் இருந்து ரூ. 1.7 கோடியை எடுக்க முயன்றபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது. பணத்தை எடுக்க வேண்டுமானால், ‘சேவைக் கட்டணமாக’ ரூ. 51 லட்சம் செலுத்த வேண்டும் என்று மோசடி கும்பல் கோரியது. அதோடு, பணம் செலுத்த மறுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்தவும் செய்தனர்.

அந்த நிமிடமே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுமித் குமார், உடனடியாக வாட்ஸ்அப் குழுவிலிருந்து நீக்கப்பட்டார். தான் முதலீடு செய்தது உண்மையான நிறுவனத்தில் இல்லை என்பதை, அசல் ‘360 ONE WAM’ அலுவலகத்தைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தினார்.

சைபர் பாதுகாப்புத்துறை  உதவியுடன், சுமித் குமார் இழந்த ரூ. 38 லட்சத்தில் ரூ. 19 லட்சம் பணத்தை முடக்கி வைக்க முடிந்தது. இருப்பினும், மீதமுள்ள தொகை ரூ. 20,000-க்கும் மேற்பட்ட ‘மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு’ உடனடியாக மாற்றப்பட்டு, பெரும்பாலான தொகை பணமாக எடுக்கப்பட்டதால், அது மீட்க முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது.

குமார் ஜூலை 15 அன்று டெல்லி காவல்துறையை அணுகிய நிலையில், கிட்டத்தட்ட ஒரு மாத தாமதத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 21 அன்றுதான் முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டது. மோசடி இணையதளத்தை முடக்கக் காவல்துறைக்கு மேலும் ஒரு மாதம் தேவைப்பட்டது

மீதமுள்ள ரூ. 19 லட்சம் பணத்தை மீட்க சுமித் குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மோசடி கும்பலை விட, சைபர் பாதுகாப்பு அமைப்புகள் ஒரு படி பின்னால் இருக்கும் இந்தச் சூழலில், இதுபோன்ற மோசடிகளுக்கு பலியாகாமல் இருக்க தனிப்பட்ட விழிப்புணர்வே மிக முக்கியம்.

இணைய மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.

உடனடி புகார்: முதலீட்டு மோசடிக்கு ஆளானால், உடனடியாக 1930 என்ற தேசிய உதவி எண்ணுக்கு அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும். பணத்தை விரைவாக முடக்குவதற்கு இந்த உடனடி நடவடிக்கை மிகவும் முக்கியம்.

வார இறுதி நாட்களில் வங்கிகள் செயல்படாததால், மோசடி கும்பல் பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் பணத்தை மாற்றும் செயலில் ஈடுபடுகிறது. இந்த நாட்களில் அதிக கவனம் தேவை.

போலி தளங்களில் கவனம்: இணையதளத்தின் முகவரியில் சிறிய மாற்றம் உள்ளதா அல்லது போலியான செபிபதிவு எண்கள் உள்ளதா என்று சரிபார்க்கவும்.

ஏஐ ஆபத்து: குரல் மற்றும் வீடியோவை மாற்றியமைக்கும் ஏஐ தொழில்நுட்பத்தை மோசடியாளர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். எனவே, அதிகாரபூர்வமான வழிகள் மூலம் மட்டுமே முதலீடுகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top