பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 2025-ன் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து ஆட்சியமைக்க உள்ளது.
எதிர்க்கட்சிகளின் ‘மகாகத்பந்தன்’ கூட்டணிக்கு இது ஒரு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கடுமையாகப் போராடியபோதிலும், கூட்டணி ஒட்டுமொத்தமாக படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் , இந்தத் தேர்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்றி, தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்கத் தயாராகி வருகிறது. அதேவேளையில், பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
வாக்கு சதவிகிதத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் முன்னிலை
இந்த மாபெரும் பின்னடைவுக்கு மத்தியிலும், வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்டத் தரவுகளின்படி, ஒரு சுவாரஸ்யமான புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. அதாவது, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, தனிப்பட்ட முறையில் அதன் முக்கியப் போட்டியாளர்களான பாரதிய ஜனதா கட்சி மற்றும் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (JDU) ஆகிய கட்சிகளை விட அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுள்ளது.
தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கட்சி இதுவரை 22.79 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது, இது பாரதிய ஜனதா கட்சியை விட 2.27 சதவீதம் அதிகமாகவும், முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை விட 3.8 சதவீதம் அதிகமாகவும் உள்ளது என்று தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தில் சமீபத்திய போக்குகள் தெரிவிக்கின்றன.




