Close
மார்ச் 7, 2026 4:23 மணி

சாலுமரதா திம்மக்கா: 114 வயதில் மறைந்த ‘மரங்களின் தாய்’

பத்மஸ்ரீ விருது பெற்றவரும், சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிக்காகப் போற்றப்பட்டவருமான ‘சாலுமரதா’ திம்மக்கா தனது 114-வது வயதில் பெங்களூருவில் காலமானார்.

ஜூன் 30, 1911 அன்று கர்நாடகாவின் துமகூரு மாவட்டம் குப்பி வட்டத்தில் பிறந்த திம்மக்காவுக்கு, முறையான கல்வி அறிவு கிடைக்கவில்லை. பன்னிரண்டாவது வயதில் திருமணம் நடந்தது இவருக்கும் இவரது கணவர் சிக்கய்யாவுக்கும் குழந்தைகள் இல்லாததால் ஏற்பட்ட வெறுமையைப் போக்க, இயற்கையிடம் அடைக்கலம் புகுந்தனர்.

தன் கணவருடன் சேர்ந்து, முதல் வருடத்தில் பத்து ஆலமரக் கன்றுகளை நட்டார். பிறகு மேலும் பல டஜன், அதன்பின் நூற்றுக்கணக்கான கன்றுகளை நட்டு வளர்த்தார்.

வறண்ட, கடினமான நிலப்பரப்பில், அவர் மைல் கணக்கில் கைகளால் தண்ணீர் சுமந்து சென்று ஊற்றினார். ஒவ்வொரு கன்றையும் முள்ளடர்ந்த புதர்களால் வேலி அமைத்துக் காத்தார். ஒரு தாய் தன் குழந்தையைக் காப்பது போலவே, ஒவ்வொரு மரக்கன்றையும் அவர் பேணி வளர்த்தார். கணவருடன் சேர்ந்து, அவர்கள் கிட்டத்தட்ட 400 ஆலமரங்களை வளர்த்தெடுத்தனர்.

கன்னடத்தில் ‘மரங்களின் வரிசை’ என்று பொருள்படும் ‘சாலுமரதா’ என்ற பெயர் இவருக்கு அதன் பின்னரே நிலைத்தது.

2019ம் ஆண்டில் பாகேபள்ளி-ஹலகுரு சாலையின் அகலப்படுத்தலுக்காக அவர் நட்டு வளர்த்த 385 ஆலமரங்கள் வெட்டப்படும் அபாயத்தில் இருந்தன. இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு திம்மக்கா முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஜி. பரமேஸ்வராவிடம் கோரிக்கை விடுத்தார் . இதன் விளைவாக, 70 ஆண்டுகள் பழமையான மரங்களைக் காப்பாற்ற மாற்று வழிகளைத் தேட அரசாங்கம் முடிவு செய்தது

சாலுமரதா திம்மக்கா தனது வாழ்நாளின் 80 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 8,000-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டுப் பராமரித்துள்ளார். இவரது இடைவிடாத உழைப்பிற்காகவும், இயற்கையின் மீதான அக்கறைக்காகவும் இவர் “விருட்ச மாதா”  (மரங்களின் தாய்) என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான இவரது மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், 2019-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.  மேலும், நாடோஜா விருது (2010), தேசிய குடிமகன் விருது (1995), இந்திரா பிரியதர்ஷினி விருட்சமித்ரா விருது (1997) உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட பெரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானதாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர்

சாலுமரதா திம்மக்காவின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது இரங்கல் செய்தியில், திம்மக்கா ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு, அவற்றை தன் குழந்தைகள்போல் வளர்த்தெடுத்து, தன் வாழ்நாள் முழுவதையும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அர்ப்பணித்தவர். இயற்கை மீதான அவரது அன்பு அவரை அழியாதவராக ஆக்கிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

சாலு மரத் திம்மக்காவின் இறுதிச் சடங்குகள் ஞானபாரதி கலாகிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றன. காவல்துறையினர் திம்மக்காவுக்கு மூன்று சுற்று மரியாதை செலுத்தி சிறப்பு அஞ்சலி செலுத்தினர்.

ஒரு சாதாரணத் தொழிலாளியாக இருந்து பத்மஸ்ரீ விருது பெறும் வரை அவரது பயணம், இந்தியாவின் தூய்மையான சுற்றுச்சூழல் மரபுகளில் ஒன்றாக இன்றும் நிலைத்திருக்கிறது.

அவர் 114 வயதில் மறைந்தாலும், அவர் நட்டு வளர்த்த பசுமை வரிசைகள் தொடர்ந்து சுவாசித்துக் கொண்டிருக்கும். ஒரு தனி மனிதரின் அக்கறை ஒரு நிலப்பரப்பின் வடிவத்தையே மாற்றியமைக்க முடியும் என்பதை இந்த மரங்கள் நமக்கு எப்போதும் நினைவூட்டும். அவர் நட்டு வளர்த்த மரங்களின் பசுமைத் தடங்கள், அவரது சுற்றுச்சூழல் மீதான காதலின் நீங்கா நினைவூட்டலாக நிலைத்திருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top