Close
மார்ச் 7, 2026 1:15 மணி

துபாயில் தேஜஸ் விமான விபத்து: எப்படி விபத்துக்குள்ளானது?

துபாயில் நடைபெற்று வந்த சர்வதேச விமானக் கண்காட்சியின்போது, இந்திய விமானப் படையைச் சேர்ந்த உள்நாட்டுத் தயாரிப்பான ‘தேஜஸ்’ இலகுரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில், அதன் விமானி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று (நவம்பர் 21, வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.08 மணியளவில் (உள்ளூர் நேரம்) நிகழ்ந்தது.

வான்வெளியில் பார்வையாளர்களை மிரட்டும் சாகசங்களில் ஈடுபட்டிருந்த தேஜஸ் விமானம், திடீரென சமநிலையை இழந்து கீழ்நோக்கிப் பாய்ந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குப் பிறகு கருமைகுழந்த அடர்ந்த புகை மண்டலம் அந்தப் பகுதியில் எழுந்தது. இந்தச் சம்பவத்தில் விமானி உயிரிழந்ததை இந்திய விமானப் படை உறுதி செய்துள்ளது.

கிட்டத்தட்ட குறைபாடற்ற பாதுகாப்பு சாதனையைப் பெற்றுள்ள தேஜஸ், தனது 24 ஆண்டுகால வரலாற்றில் சந்திக்கும் இரண்டாவது விபத்து இதுவாகும். விபத்துக்கான காரணத்தை இந்திய விமானப் படை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், நிபுணர்கள் விபத்தின் கடைசி நிமிடங்களை ஆராய்ந்து அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானி, ‘பேரல் ரோல்’ எனப்படும் சிக்கலான சாகசத்தை நிகழ்த்த முயன்றதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சாகசத்தின்போது விமானம் தலைகீழாகச் சுழன்று, பின்னர் மீண்டும் நிலைக்கு வர வேண்டும்.

ஆனால், விமானம் தரையில் இருந்து மிகவும் குறைந்த உயரத்தில் இருந்ததாகவும், சாகசத்தை முழுமையாக முடிக்கத் தேவையான வேகத்தை அது பெறத் தவறியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாகவே விமானம் மீண்டும் மேலே வராமல் தரையில் மோதியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிவேகத்தில் நிகழ்த்தப்படும் இதுபோன்ற சாகசங்களில் சிறிய அளவிலான தவறான கணக்கீடுகள்கூட பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மேலும், இஞ்சின் கோளாறு கூட விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் சில நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த விபத்துக்கு முதல் நாள் தான், தேஜஸ் போர் விமானத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக வெளியான வதந்திகளை மத்திய அரசு மறுத்தது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவை தளமாகக் கொண்ட ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜஸ், இந்தியாவின் முதல் உள்நாட்டுப் போர் விமானமாகும். தனது மிகப் பழமையான மிக்-21 ரக விமானங்களை முழுவதுமாக நீக்கியுள்ள இந்திய விமானப் படை, அதன் படைக் குறைபாட்டை நிரப்ப தேஜஸ் விமானங்களையே பெரிதும் நம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top