Close
மார்ச் 7, 2026 11:48 காலை

வைபவ் சூர்யவன்ஷிக்கு ‘பிரதமர் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்’ விருது

இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷிக்கு, விளையாட்டுத் துறையில் அவர் ஆற்றி வரும் அசாத்திய சாதனைகளைப் பாராட்டி, மத்திய அரசின் உயரிய விருதான ‘பிரதமர் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்’ வழங்கப்பட்டுள்ளது.

புதுடில்லியில் நடைபெற்ற விழாவில், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த விருதை வைபவ்வுக்கு வழங்கி கௌரவித்தார்.

14 வயதே ஆன இடதுகை ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி, மிகச் சிறிய வயதிலேயே கிரிக்கெட் உலகில் பல சாதனைகளைப் படைத்து வருகிறார். இவருடைய அபாரமான ஆட்டத்திறன், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஆரம்பகால எழுச்சியுடன் ஒப்பிடப்படுகிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஒப்பந்தம் செய்யப்பட்ட மிக இளம் வீரர் என்ற பெருமையை வைபவ் பெற்றார்.

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதமடித்து, டி20 கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி போட்டியில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக 59 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் மிக வேகமான 150 ரன்கள் எடுத்த ஏபி டி வில்லியர்ஸின் (64 பந்துகள்) உலக சாதனையை முறியடித்தார்.

மேலும் சையத் முஷ்டாக் அலி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே கோப்பை ஆகிய இரண்டிலும் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற இரட்டைச் சாதனையை அவர் தன்வசம் வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் வைபவ் அதிரடியான சதங்களை விளாசியுள்ளார். குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 52 பந்துகளில் சதமடித்து, அண்டர்-19 வரலாற்றில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

தற்போது ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாட வைபவ் சூர்யவன்ஷி தயாராகி வருகிறார்.

இளம் வயதிலேயே நாட்டுக்கு பெருமை சேர்த்து வரும் வைபவ்வுக்கு வழங்கப்பட்ட இந்த ‘பால் புரஸ்கார்’ விருது, வரும் காலங்களில் இந்திய தேசிய அணியில் அவர் இடம்பிடிப்பதற்கான ஒரு பெரும் அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. ஜனாதிபதியிடம் விருது பெற்ற வைபவ்வுக்கு விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top