இந்தியாவின் விண்வெளி கனவுகளை நனவாக்கி வரும் இஸ்ரோ, தற்போது ஊழியர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாகவும், இதனைச் சரிசெய்ய பெரிய அளவிலான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் மக்களவையில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, இஸ்ரோவில் மொத்தம் 18,142 அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளன. ஆனால், தற்போது 15,529 ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். அதாவது, சுமார் 2,613 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் 14,108 பணியிடங்களில் 1,636 இடங்கள் காலியாக உள்ளன. நிர்வாகப் பிரிவில் சுமார் 977 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
தற்போது சுமார் 1,449 பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இவை அக் 2026-க்குள் முழுமையாக நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ககன்யான், சந்திரயான்-4, நிசார் மற்றும் சுக்ராயன் போன்ற மிக முக்கியமான விண்வெளித் திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. இத்தகைய பிரம்மாண்ட திட்டங்களை வெற்றிகரமாக முடிக்கத் திறமையான இளைஞர்களின் பங்களிப்பு இஸ்ரோவுக்கு அவசியமாக உள்ளது.




