Close
மார்ச் 8, 2026 6:39 காலை

மம்தாவிற்கு என் மீது கோபமா? – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் கேள்வியால் பரபரப்பு!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே ஏற்பட்டுள்ள நேரடி மோதல் மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

வடக்கு வங்காளத்திற்கு விஜயம் செய்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சிலிகுரி வந்தடைந்தபோது அவரை வரவேற்க முதல்வர் மம்தா பானர்ஜியோ அல்லது அவரது அமைச்சரவை சகாக்களோ வராதது குறித்து பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்தார்.

பழங்குடி சமூகத்தினருக்கான நிகழ்வான சர்வதேச சந்தால் மாநாட்டில் தலைமை விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய அவர் உரையாற்றுகையில், மம்தா பானர்ஜி என் தங்கையைப் போன்றவர். அவர் என் மீது ஏதேனும் வருத்தத்தில் இருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை. மாநில நிர்வாகம் ஏன் இந்த நிகழ்வுக்குத் தடைகளை ஏற்படுத்தியது என்பதும் புரியவில்லை. நானும் வங்காளத்தின் மகள்தான். சிலர் சந்தால் சமூகத்தினர் ஒன்றுபடுவதையும், கல்வி கற்று முன்னேறுவதையும் விரும்பவில்லை என்று நினைக்கிறேன் என வேதனை தெரிவித்தார்.

மேலும், பிதான்நகரில் நடைபெற வேண்டிய நிகழ்ச்சி கடைசி நேரத்தில் கோஷாய்பூருக்கு மாற்றப்பட்டது குறித்தும், அங்கு மக்கள் வருவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்தச் சம்பவத்தை கையில் எடுத்துள்ள பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் அரசு குடியரசுத் தலைவர் பதவியின் கண்ணியத்தை அவமதித்துவிட்டதாகக் கூறியுள்ளது. இது குறித்து பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா கூறுகையில், “இந்தியக் குடியரசுத் தலைவரை வரவேற்கக் கூட மாநில அரசு முன்வராதது நிர்வாகச் சீர்குலைவின் உச்சம். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு இழைக்கப்பட்ட அவமரியாதை,” என்று சாடினார்.

கொல்கத்தாவில் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் முதல்வர் மம்தா பானர்ஜி, குடியரசுத் தலைவரின் விமர்சனங்களுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார். “ஜனாதிபதி பதவியில் இருப்பவர்கள் அரசியல் பேசக்கூடாது என்று நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தேர்தலுக்கு முன்பாக பாஜகவின் ஆலோசனையின் பேரில் இத்தகைய அறிக்கைகளை வெளியிட வேண்டாம். வங்காளத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி மட்டும் பேசும் நீங்கள், மற்ற சமூகங்களின் வளர்ச்சியைப் புறக்கணிக்கிறீர்கள். இங்கிருந்து பழங்குடியினரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது உங்களுக்குத் தெரியுமா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

பழங்குடியினருக்கு வங்காள அரசு எதையும் செய்யவில்லை என்ற குடியரசுத் தலைவரின் கூற்றைத் திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது.

லட்சுமி பந்தர் திட்டத்தில் பழங்குடியினப் பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,200-லிருந்து ரூ.1,700-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதிவாசி மாணவர்களுக்கான பிரத்யேக பள்ளிகள் மற்றும் கல்வி உதவித்தொகை திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன. பழங்குடியினப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தவறான தகவல்களின் அடிப்படையில் ஜனாதிபதி கருத்து தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது” என்று திரிணாமுல் காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

தேர்தல் நெருங்கும் வேளையில், நாட்டின் முதற்பெண்மணிக்கும் மாநில முதல்வருக்கும் இடையிலான இந்த மோதல் மேற்கு வங்க தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top