முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் பெண்களின் உரிமைகள் மீறப்படுவதாகக் கூறப்படும் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.
இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தனிநபர் சட்டங்களால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
இந்தியாவில் நீண்டகாலமாக விவாதத்திற்குரிய பொருளாக இருந்து வரும் ‘பொது சிவில் சட்டம்’ குறித்து உச்சநீதிமன்றம் மிக முக்கியமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் பெண்களுக்குச் சொத்துரிமையில் இழைக்கப்படும் பாகுபாடுகளை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இத்தகைய சிக்கல்களுக்குப் பொது சிவில் சட்டமே முறையான தீர்வாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளது.
தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மாலியா பாக்சி, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்த முக்கியக் கருத்துக்கள்:
தனிநபர் சட்டங்களில் உள்ள சில விதிகளை மட்டும் நீதிமன்றம் ரத்து செய்தால், அந்த இடத்தில் ஒரு ‘சட்ட வெற்றிடம்’ உருவாகும். அதாவது, பழைய சட்டத்தை நீக்கினால், புதிய சட்டம் அமலுக்கு வரும் வரை அந்த விவகாரங்களை எதன் அடிப்படையில் கையாளுவது என்ற சிக்கல் எழும்.
நீதிமன்றம் சட்டங்களை ரத்து செய்வதை விட, நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதே சிறந்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் 44-வது பிரிவு , அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
முஸ்லிம் பெண்களுக்கு ஆண்களுக்கு இணையான உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நீதிமன்றத் தலையீட்டை விட சட்டத்தின் மூலம் கொண்டு வரப்படும் பொது சிவில் சட்டமே இதற்கு நிரந்தரமான மற்றும் பயனுள்ள தீர்வாக இருக்கும் என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்துக்கள், இந்தியாவில் பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளன. நீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டு சட்டங்களை ரத்து செய்வதை விட, நாடாளுமன்றத்தில் ஒரு விரிவான பொது சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், சொத்துரிமை என்பது சிவில் உரிமை சார்ந்ததே தவிர, அது மத ரீதியானது அல்ல என்று வாதிட்டார்.
இருப்பினும், இந்த விவகாரத்தில் விரிவான சட்டப் பாதுகாப்பு தேவைப்படுவதால், மனுவில் தேவையான மாற்றங்களைச் செய்து மீண்டும் தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்துக்கள், தேசிய அளவில் பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை முன்னெடுத்துள்ளன.




