இந்திய நீதித்துறையை நவீனப்படுத்தவும், வழக்குகளை விரைவாக விசாரிக்கவும் மத்திய அரசு மேற்கொண்டு வரும் இ-கோர்ட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 660 கோடிக்கும் அதிகமான நீதிமன்ற ஆவணப் பக்கங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.
இந்திய நீதிமன்றங்களை காகிதமில்லா நிறுவனங்களாக மாற்றும் பணி மூன்று நிலைகளாகத் திட்டமிடப்பட்டுள்ளது:
2011 முதல் ரூ.935 கோடி செலவில் 14,249 கோர்ட்கள் கணினிமயமாக்கப்பட்டன. மேலும் டிஜிட்டல் வழக்கு மேலாண்மை மென்பொருள் அறிமுகம். 2015 – 2023 காலகட்டத்தில் ரூ.1,670 கோடி செலவில் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட கோர்ட்கள் 18,735 ஆக உயர்வு. 2023 – 2027 காலகட்டத்தில் ரூ. 7,210 கோடி செலவில் முழுமையான காகிதமில்லா நீதிமன்றங்கள்; கிளவுட் தொழில்நுட்பம் மற்றும் ஏஐ பயன்பாடு.
நீதிமன்றச் சேவைகளை சாமானிய மக்களும் எளிதில் அணுகும் வகையில் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன: நாடு முழுவதும் இதுவரை 2,444 இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை வழக்கறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஆன்லைன் சேவைகளை வழங்குகின்றன.
இதுவரை 3.97 கோடிக்கும் அதிகமான விசாரணைகள் காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்டுள்ளன. சுமார் 1.07 கோடி வழக்குகள் ஆன்லைன் தளம் மூலம் மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உத்தரகண்ட், கல்கத்தா, தெலங்கானா மற்றும் மேகாலயா உள்ளிட்ட 11 உயர் நீதிமன்றங்களில் நீதிமன்ற நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன.
நீதிமன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், பிழைகளைக் குறைக்கவும் அதிநவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. சென்னை ஐஐடி-யுடன் இணைந்து சுப்ரீம்கோர்ட் உருவாக்கியுள்ள ஏஐ தொகுதி மூலம் வழக்கு மனுக்களில் உள்ள பிழைகளைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். சட்ட ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்விற்காக ‘லெக்ரா’ என்ற உதவி மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
வழக்குத் தகவல் அமைப்பு மேம்படுத்தப்பட்டு, வேகமான வழக்கு மேலாண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் மாற்றங்கள் மூலம் நீதிபதிகள் இனி அனைத்து ஆவணங்களையும், சாட்சியங்களையும் டிஜிட்டல் முறையிலேயே அணுக முடியும். இது இந்திய நீதித்துறை வரலாற்றில் “காகிதமில்லா நீதிமுறை” நோக்கிய ஒரு மிகப்பெரிய பாய்ச்சலாகக் கருதப்படுகிறது.




