இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, மத்திய அரசு இயற்கை எரிவாயு விநியோகத்தில் புதிய முன்னுரிமைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவின் மின் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
நாட்டில் நிலவும் எல்பிஜி தட்டுப்பாட்டைச் சமாளிக்க, அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-ன் கீழ் மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி இயற்கை எரிவாயு விநியோகத்தில் முன்னுரிமை மாற்றப்பட்டுள்ளது:
வீடுகளுக்கான குழாய் வழி எரிவாயு, எல்பிஜி உற்பத்தி மற்றும் போக்குவரத்துக்கான சிஎன்ஜி. இவற்றுக்கு 100% விநியோகம் உறுதி செய்யப்படும். உரத் தொழிற்சாலைகள் 70% விநியோகம். தேயிலை உற்பத்தி உள்ளிட்ட தொழில்முறை மற்றும் வணிக நுகர்வோர்களுக்கு 80% விநியோகம்.
இந்த வரிசையில் மின் உற்பத்திக்கு மிகக் குறைந்த முன்னுரிமையே அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளின் விளைவாக, இந்திய எரிவாயு ஆணையம் மார்ச் 12 முதல் எலகங்கா எரிவாயு மின் நிலையத்திற்கான விநியோகத்தை முழுமையாக நிறுத்தியுள்ளது.
கர்நாடக மின் கழகத்தால் நிறுவப்பட்ட இந்த 370 மெகாவாட் திறன் கொண்ட ஆலை, பெங்களூரு நகரின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் முதல் தொடர்ந்து இயங்கி வந்தது. மாநிலத்தின் ஒரே எரிவாயு மின் நிலையம் இது என்பதால், இதன் உற்பத்தி நிறுத்தம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் தினசரி மின் தேவை தற்போது சுமார் 355 மில்லியன் யூனிட்டுகளாக உள்ளது. இந்தத் தேவையை அரசு சூரிய சக்தி மற்றும் காற்றாலை, மத்திய தொகுப்பிலிருந்து பெறப்படும் மின்சாரம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களுடனான மின் பரிமாற்ற ஒப்பந்தங்கள் மூலம் பூர்த்தி செய்து வருகிறது
இருப்பினும், எலகங்கா ஆலையில் உற்பத்தி தடைபடுவது உச்சக்கட்டத் தேவை நிலவும் நேரங்களில் சிறு மின் தடங்கல்களுக்கு வழிவகுக்கலாம் என அஞ்சப்படுகிறது.




