Close
அக்டோபர் 5, 2024 7:04 மணி

விலைவாசி உயர்வுக்கு திமுக அரசே காரணம்: முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் குற்றச்சாட்டு

ஈரோடு

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பண்ணன் பேசினார்

விலைவாசி உயர்வுக்கு திமுக அரசே காரணம்: முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் குற்றச்சாட்டினார்.

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதிதொகுதிக்கு உள்பட்ட பெருந்துறை வடக்கு ஒன்றிய அண்ணா திமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மெயின் ரோடு, வெங்கமேட்டில் உள்ள ஜெ.கே. ட்ரேடர்ஸ் ஹாலில் நடைபெற்றது.

பெருந்துறை முன்னாள் எம்எல்ஏக்கள் சி.பொன்னுதுரை, டாக்டர் பொன்னுசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் டி.டி.ஜெகதீஷ் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு பெருந்துறை எம்எல்ஏ ஜெ.கே.என்கிற ஜெயக்குமார் தலைமை வகித்து பேசியதாவது:பெருந்துறை வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்டகருமாண்டி செல்லிபாளையம், காஞ்சிக்கோவில்,பெத்தாம்பாளையம், பள்ளபாளையம் பேரூராட்சிகள், திருவாச்சி ஊராட்சி, பெரிய விளாமலை ஊராட்சி, முள்ளம்பட்டி ஊராட்சி, என்.கந்தம்பாளையம் ஊராட்சிகளை சேர்ந்த பூத் கமிட்டி கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள வடக்கு ஒன்றிய செயலாளர் வைகைத்தம்பி என்கிற ரஞ்சித்ராஜை பாராட்டுகிறேன்.

பெருந்துறை தொகுதி எப்போதும் அதிமுகவின் கோட்டையாக விளங்கி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இங்கு அமைக்கப்பட்டுள்ள வலுவான பூத் கமிட்டி இதுதான். கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மற்ற தொகுதிகளில் அதிமுகவின் வெற்றிக்காக எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது கூட எடப்பாடி தொகுதியில் அவர் 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தார் இ.பி.எஸ். அதற்கு முக்கிய காரணமே எடப்பாடி தொகுதியில் அவர் அமைத்திருந்த சிறப்பான பூத் கமிட்டி தான்.

மகளிர் அணி, இளைஞரணி, இளைஞர் பாசறைகளில் தலா 50 பேர் என 150 பேர், இவர்களுக்கு உதவியாக முக்கிய நிர்வாகிகள் 12 பேர் என மொத்தம் 162 பேர் பூத் கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பான முறையில் பணியாற்றி திருப்பூர் பாராளுமன்ற தொகுதியிலேயே அதிக வாக்குகளை பெற்றுக் கொடுத்தது பெருந்துறை தொகுதி என்ற பெருமையை தேடித் தர வேண்டும் என்றார்.

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பண்ணன் பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா “எனக்குப் பிறகும் நூறாண்டுகள் அதிமுக ஆட்சியில் இருக்கும்” என்று கூறியிருந்தார். அதேபோல எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கும் போது அமைக்கப்பட்ட ஜாதகத்தின் படி அதிமுகவுக்கு என்றும் அழிவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதை நிரூபிக்கும் வகையில் எடப்பாடியார் தனது திறமையால் 2.25 கோடி உறுப்பினர்களை அதிமுகவில் இணைத்து இந்தியாவிலேயே மிகப்பெரிய இயக்கமாக அதிமுகவை கட்டமைத்துள்ளார். ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியை எடப்பாடியார் செவ்வனே செய்து மக்களிடத்தில் நன்மதிப்பை பெற்றார்.

பெருந்துறை தொகுதியை பொருத்தவரை அத்திக்கடவு- அவினாசி திட்டம், கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம், பெருந்துறை ஐ ஆர் டி டி மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றியது என பல்வேறு திட்டங்களை கொடுத்துச் சென்றார். கடைசி ஒன்றரை ஆண்டுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோம். இல்லையெனில், அத்திக்கடவு அவினாசி திட்டம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திட்டம் என அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றி இருப்போம்.

இது போல் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையையும் செயல்படுத்தி இருப்போம். தற்போது ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாகியும் திமுக அரசு அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வில்லை. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மருத்துவர்களை நியமிக்காமல் மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

அதேபோல விலைவாசியும் விஷம் போல ஏறி கொண்டு இருக்கிறது இந்த 5 மாதங்களில் மட்டும் 25 கிலோ அரிசி சிப்பத்தின் விலை ரூ.500 வரை உயர்ந்துள்ளது. இதே போல கடுகு, சீரகம் பருப்பு என அனைத்து சமையல் பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது.

சென்னையில் வடநாட்டவர்கள் துவரம் பருப்பு போன்றவற்றை பதுக்கி வைத்து அதற்கு செயற்கையான தட்டுப்பட்டை ஏற்படுத்தி கூடுதல் விலை வைத்து விற்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக ஸ்டாலின் மருமகன் சபரீசன் மற்றும் ஆட்சியாளர்கள் லஞ்சமாக ரூ. 5 கோடி முதல் 10 கோடி வரையிலும் பெற்றுக் கொள்கிறார்கள். இது தட்டி கேட்பவர் யாரும் இல்லை. திமுகவினர் வருமானம் மட்டுமே குறியாக செயல்படுகிறார்கள்.

ஈரோடு
எடப்பாடி ஆட்சி காலத்தில் நல்ல மழை பெய்தது. அனைத்து பொருள்களின் விலைவாசியும் கட்டுப்பாட்டில் இருந்தது.
தற்போது திமுக தொடங்கி வைக்கும் திட்டங்கள், பணிகள் எல்லாம் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டவை. திமுக புதிய திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை.இந்த ஆட்சியின் அவலங்கள் குறித்து ஐ.டி. ,அணியை சேர்ந்த இளைஞர்கள் ஊடகங்களில் வரும் ஆட்சிக்கு எதிரான செய்திகளை சேகரித்து வாட்ஸ்-ஆப் குரூப்புகளில் பதிவு செய்ய வேண்டும்.

அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், இலவச கிளினிக், காப்பீட்டு திட்டம் என எதுவும் செயல்பாட்டில் இல்லை. இந்த தகவல்களை பூத் கமிட்டி உறுப்பினர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு எடுத்துக் கூறி, ஜெயலலிதா, இபிஎஸ் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்து எடுத்துச் சொல்லி வாக்குகளை சேகரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

பெருந்துறை தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசும்போது, ஒவ்வொரு கிளை வாரியாக பூத் கமிட்டியை மிகச் சிறப்பாக அமைக்க வேண்டும் என்று இபிஎஸ் ஆணையிட்டுள்ளார்.

ஈரோடு

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய பெரும் தலைவர்கள் இல்லாத நிலையிலும் அதிமுக சிறப்பாக செயல்பட்டு அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற நிலையை ஏற்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமி. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் பூத் கமிட்டியை வலுவாக அமைக்க வேண்டும் என்ற அடிப்படை காரணத்திற்காகவே இந்த உத்தரவை எடப்பாடியார் பிறப்பித்துள்ளார். இந்தப் பணியை சிறப்பாக செய்யவே மாநில பொறுப்பில் உள்ளவர்களின் தலைமையில் பூத் கமிட்டி அமைக்கப் பட்டுள்ளது.

கட்சியின் வெவ்வேறு அணிகளைச் சேர்ந்தவர்களும் பூத் கமிட்டியில் இடம்பெற செய்வதற்காக மகளிர் அணி, இளம் பெண் பாசறை, இளைஞர் பாசறை, ஐ.டி. அணி என அனைத்து தரப்பினரையும் நியமிக்குமாறு எடப்பாடியார் உத்தரவிட்டார். பெருந்துறை தொகுதியில் எப்போதும் அதிமுகவின் கோட்டையாக விளங்கி வருவது நல்ல நிர்வாகத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அதேபோல இந்த இந்த முறையும் பூத் கமிட்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு அதிமுகவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றார்.

முன்னதாக, பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் வைகைதம்பி என்கிற ரஞ்சித்ராஜ் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் பேரூர், ஊராட்சி பொறுப்பாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top