அதிமுகவில் மட்டும் உழைக்கும் தொண்டர்களுக்கு, எந்த பதவி வேண்டுமானாலும் தேடி வரும் என, முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான இ.பி.எஸ்., மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம், பிரச்சார பயணத்தை தமிழகத்தில் மேற்கொண்டு வருகிறார்.
நாமக்கல் மாவட்டத்தில், வரும், 19, 20, 21 என, 3 நாட்கள் அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி, அ.தி.மு.க. தொழில் நுட்ப அணி, வர்த்தகர் அணி உள்ளிட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் சரோஜா, ப.வேலூர் எம்.எல்.ஏ., சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, எம்எல்ஏ., நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:
நாம் உழைத்தால், அதிமுகவில் மட்டும்தான் எந்த பதவி வேண்டுமானாலும் நம்மை தேடி வரும். நம் இத்தனை பேரின் உழைப்பால்தான், கடந்த மக்களவை தேர்தலில், நாமக்கல் தொகுதியில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, அனைவரும் தீவிரமாக பாடுபட்டு, வரும் சட்டசபை தேர்தலில், மாவட்டத்தில், உள்ள 6 சட்டசபை தொகுதகளிலும் வெற்றிபெறுவோம்.
தற்போது, ஐ.டி., விங்கின் செயல்பாடுதான், மக்கள் மத்தியில், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் நிற்கின்ற அளவிற்கு வளர்ந்துள்ளது. சாதாரண கிராமத்தில் கூட வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் பார்க்கின்ற சூழல் உருவாகி இருக்கிறது. அரசியலில் கூட பாதி அரசியல் வாட்ஸ் ஆப்பில்தான் போய்க்கொண்டிருக்கிறது.
அனைத்து சார்பு அணியினரும், பொதுச்செயலாளர் இபிஎஸ் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு அவருக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும். இபிஎஸ் பிரச்சார நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய அனைவரும் கடுமையாக பாடுபட வேண்டும். என்று கூறினார்.
நாமக்கல் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் தமிழ்மணி, மாநில வக்கீல் அணி துணை செயலாளர் பாலுசாமி, ஐ.டி.,விங் மாவட்ட செயலாளர் முரளி பாலுசாமி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, இ.பி.எஸ்., சுற்றுப்பயணம் குறித்த பிரச்சார வாகனத்தை, முன்னாள் அமைச்சர் தங்கமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.




