Close
மார்ச் 7, 2026 2:52 மணி

தேர்தல் தோல்வி பயத்தால் திமுக எஸ்ஐஆர்-ஐ எதிர்க்கிறது: பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி

வி.பி.துரைசாமி, பாஜக மாநில துணைத்தலைவர்

சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தால், திமுக எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து வருகிறது என பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறினார்.

நாமக்கல் நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த, பாஜ மாநில துணைத்தலைவரும், ராசிபுரம் சட்டசபை தொகுதி பாஜக தேர்தல் பொறுப்பாளருமான வி.பி.துரைசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய தேர்தல் ஆணையம் இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்களை (எஸ்ஐஆர்) நடத்தி வருகிறது. இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்த வாக்காளர்கள் மற்றும் வெளியூர் சென்ற வாக்காளர்களின் பெயர்களை நீக்கவும், விடுபட்டுள்ள வாக்காளர்களை சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் போலி வாக்காளர்கள் இருப்பதாக பலரும் கூறிவந்த நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலம் உண்மையான, முழுமையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த பணியை அனைத்து பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் இண்டி கூட்டணி கட்சியின் கூட்டத்தைக் கூட்டி வாக்காளர் பட்டியில் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கைவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி முழுவதையும் தமிழக அரசின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள், வட்டாட்சியர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள்தான் நடத்துகின்றனர். அப்படி இருக்கும்போது, மத்திய அரசு எப்படி முறைகேடு செய்ய முடியும்?

இந்தியாவிலேயே எஸ்ஐஆரை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள ஒரே கட்சி திமுகதான். வருகிற 2026 சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், போலி வாக்காளர்களை வைத்து, கள்ள ஓட்டுப் போட திட்டமிட்டுள்ளனர். இதனால்தான் அவர்கள் எஸ்ஐஆரை எதிர்க்கின்றனர்.

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கோவையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் நடைபெற்றது, மிகவும் கண்டித்தக்கது, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இந்த வழக்கில் விரைவாக விசாரணை நடத்தி 60 நாட்களுக்குள், குற்றவாளிகளுக்கு உரியை தண்டனை பெற்றுத்தர காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராசிபுரம் நகராட்சியில் தனியாரின் லாபத்திற்காக புதிய பேருந்து நிலையத்தை மிகத்தொலைவில் அமைக்கின்றனர். பேருந்து நிலையம் அமைப்பதற்கு, ஒரு தனி நபர் நிலத்தை தானமாக கொடுத்துள்ளார். அந்த நிலத்தை பெறுவதற்கு நகராட்சி ஆணையர் கடந்த 2024 மக்களவை தேர்தல் நடைபெற்று நாளில் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் நாளில் நகராட்சி அலுவலகம் எப்படி செயல்பட்டுள்ளது?. இது குறித்து, வெண்ணந்தூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி அருள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ராசிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் களிமண் பூமியாகும். அதிக அளவில் மழை பெய்தால் கட்டிடங்கள் சரிந்து விழுந்து, பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் பெரும் இழப்பு ஏற்படும். எனவே ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்களுக்கு பயனுள்ள இடத்தை தேர்வு செய்து அமைக்க வேண்டும்.

நாமக்கல் நகரில் புதிய பேருந்து நிலையம் நகரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல முடியாமல் நகரில், மெயின் ரோட்டில் நின்று பேருந்தில் ஏறிச் செல்கின்றனர்.

இதனால் பேருந்து பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே திருச்சி, துறையூர், மோகனூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையம் வந்து செல்வதைக் கட்டாயமாக்க வேண்டும்.

நாமக்கல்லில் பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில் சித்த மருத்துவமனை துவக்கப்பட்டுள்ளது. அதை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். மேலும் பொதுமக்களுக்காக தாலுகா அளவிலான அரசு மருத்துவமனையை, பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில் அமைக்க வேண்டும் என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top