Close
மார்ச் 7, 2026 11:59 காலை

தி.மு.க.வின் நலத்திட்டம் பெற்ற 2 கோடி வாக்காளரை எஸ்ஐஆர் மூலம் நீக்க சதி: எம்.பி. பகீர் குற்றச்சாட்டு

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற, கூட்டணி கட்சிகள் கூட்டத்தில், மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., பேசினார்.

தமிழகத்தில், தி.மு.க., வின் நலத்திட்டங்களை பெற்ற, 2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களை, எஸ்.ஐ.ஆர்., மூலம் நீக்க சதி நடக்கிறது என ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் கூறினார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் இளங்கோவன், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ராஜேஷ்குமார் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை (எஸ்ஐஆர்), திமுக ஆரம்பம் முதல் எதிர்த்து வருகிறது. எஸ்.ஆர்.-ஐ மேலோட்டமாக பார்க்கும் போது இறந்தவர்கள், இரட்டை பதிவு ஓட்டுகள், வெளியூர் சென்றவர்களை நீக்குவது என நல்லது போல் தெரியும்.

ஆனால், ஒரு சட்டசபை தேர்தலை அருகில் வைத்துக்கொண்டு, கால அவகாசம் இல்லாமல், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்யக் கூடாது. தமிழகத்தில், முதல்வரின் திட்டங்களான முதியோர் உதவித்தொகை, கிராமப்புறங்களில் மகளிருக்கு இலவச பேருந்து  வசதி, மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் என கடைக்கோடி மக்களுக்கும் ஏராளமான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தி.மு.க.வின் நலத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், 2 கோடி வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ளனர். அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு, பீகார் மாநிலத்தை போல், தமிழ்நாட்டிலும் சதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, தமிழக அரசின் திட்டங்களை பெற்றவர்கள், அறியாமையில் இருப்பவர்கள், கல்வி அறிவு பெறாதவர்கள், பழங்குடியினர், ஆதிதிராவிடர்கள் உள்ளிட்ட வாக்காளர்களை நீக்கி விட்டால், தி.மு.க.வின் ஓட்டு வங்கி குறைந்து விடும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால் 2026 சட்டசபை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர்., சீராய்வை இந்திய தேர்தல் ஆணையம் கைவிட கோரியும், மத்திய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக மாறி தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.,ஐ செயல்படுத்துவதை கண்டித்து, நகலை 11ம் தேதி, காலை 10 மணிக்கு, நாமக்கல் – மோகனூர் மெயின் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கிழக்கு மாவட்டத்தில் உள்ள திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கொமதேக உள்ளிட்ட மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top