Close
மார்ச் 7, 2026 4:19 மணி

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: நாமக்கல் கிழக்கு தி.மு.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., பேசினார். அருகில் எம்எல்ஏ ராமலிங்கம்.

வரும், 27ம் தேதி, துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என, கிழக்கு தி.மு.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

கூட்டத்தில், வரும் 27ம் தேதி, தி.மு.க., இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதியின், பிறந்த நாளை முன்னிட்டு, அன்றயை தினம், நாமக்கல் கிழக்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மாவட்ட திமுக சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் சார்பு அணிகள் சார்பில், வரும், 27, 28ல், ஆதரவற்றோர் இல்லத்திற்கு உணவு வழங்குதல், விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம் வழங்குதல், தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்குதல், கழக மூத்த உறுப்பினர்களுக்கு வேட்டி வழங்குதல் என, 100 இடங்களில் கட்சிக் கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, மாநில மகளிர் தொண்டரணி இணை செயலாளர் ராணி, நகர செயலாளர்கள் பூபதி, ராணா ஆனந்த், சிவகுமார் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top