நாமக்கல் மாவட்டத்தில் திமுக விளையாட்டு அணி சார்பில், நாளை முதல் பொங்கல் வரை சமூக நீதிக்கான திருவிழாக்கள் நடைபெறும் என, மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., கூறினார்.
தமிழ்நாட்டில் திராவிட பொங்கல் நடத்தும் வகையில் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டம், தமிழ்நாடு முழுவதும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடத்த வேண்டும், தமிழர் திருநாளை மாநிலம் முழுவதும், திமுக சார்பில் 3 கட்டங்களாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசு பொருட்களை வழங்கிட வேண்டும் என திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி ஆலோசனைக் கூட்டம், மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் முரளி வரவேற்றார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர், ராஜேஷ்குமார் எம்.பி., தலைமை வகித்துப் பேசியதாவது: ஒருங்கிணைந்த ஒன்றியம், ஒருங்கிணைந்த நகரம், ஒருங்கிணைந்த பகுதி மண்டல அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளை, ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 9 ந் தேதி வரை நடத்திட வேண்டும்.
அதில் கிரிக்கெட், வாலிபால், கபடி, கால்பந்தாட்டம், ஓட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், கோகோ என ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக, ஒவ்வொரு பிரிவினருக்கும் குறைந்தபட்சம் தலா 3 போட்டிகளை நடத்திட வேண்டும், கலந்து கொள்ளும் அனைத்து அணிகளும் திராவிடபொங்கல்.இன் என்ற வெப்சைட்டில் பதிவு செய்திட வேண்டும்.
ஒன்றிய, நகர பகுதிகளில் வெற்றி பெற்று அணிகளைக் கொண்டு, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கி பொங்கல் திருவிழா வரை நடத்தி பரிசுகளை வழங்கிட வேண்டும். மாவட்ட அளவில் கலந்து கொள்ளும் அணிகளுக்கு விளையாட்டு உபரணங்கள் மாவட்ட திமுக சார்பில் வழங்கப்படும். மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகளைக் கொண்டு பிப்ரவரி மாதத்தில் மாநில அளவிலான பிரமாண்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்
தமிழ்நாடு முழுவதும், பேரூராட்சிகள், வார்டுகள் அளவில் மகளிரை திரட்டி சாதிமத ஏற்றத்தாழ்வு, மதமற்ற திராவிட பொங்கல் வைத்து கொண்டாடப்பட வேண்டும். அனைத்து வீடுகள் முன்பும் சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்று எழுதி திராவிட பொங்கல் கோலமிட்டு, பெண்கள் குழந்தைகளுக்கான கோலப்போட்டிகள் உள்ளிட்ட சிறு, சிறு விளையாட்டுப் போட்டிகளை நடத்திட வேண்டும்.
உழவர் திருநாள், காணும் பொங்கல், மக்கள் கொண்டாடும் வகையில், ஊரில் பொதுவான இடத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி, முதலமைச்சரின் ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகளை சிறப்பு செய்தியுடன் கூடிய திரை திருவிழா நடத்திட வேண்டும் என கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் சிலம்பரசன், ஜெயசீலன், சுரேஷ், பிரபு, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கிருபாகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளம்பரிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் காந்தி (எ) பெரியண்ணன் நன்றி கூறினார்




