மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்தும், பாஜகவுடன் துணை போகும் அதிமுகவைக் கண்டித்தும் திமுக மற்றும் முற்போக்கு கூட்டணி சார்பில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு தேவையான நலத்திட்டங்கள் அறிவிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 நாள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்øதை மத்திய அரசு கைவிட்டுள்ளது.
பல்வேறு திட்டங்களுக்கு நிதி வழங்காமல், தமிழத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசையும், அதற்கு துணை போகும் அதிமுகவையும் கண்டித்து, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள, 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு நேற்று மாலை திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி. தலைமை வகித்து பேசினார். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் சித்திக், கூட்டணி கட்சி நிர்வாகிகள் வசந்தன், மணிமாறன், அன்புமணி, அல்ஹாஜ், தவுலத்கான், அஹதுல்லா, பாரூக், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் தலைமை வகித்தார். மேலும், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், கொல்லிமலை, எருமப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட மொத்தம் 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.




