Close
மார்ச் 9, 2026 11:13 மணி

காங்கிரஸ்-திமுக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை: அகில இந்திய காங். செயலாளர் பேட்டி

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த உறுப்பினர்களுக்கு, அகில இந்திய காங். செயலாளர் நிவேதித் ஆல்வா அடையாள அட்டைகளை வழங்கினார்.

தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் கூறினார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம், நாமக்கல் மோகனூர் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு மாவட்ட காங்கிரஸ்  தலைவர் டாக்டர் செந்தில் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் டாக்டர் செழியன், சுப்பிரமணி, சீனிவாசன், சித்திக், மாநகர காங்கிரஸ் தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த புதிய உறுப்பினர்களுக்கு அவர் உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் கூட்டணியில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. மற்ற கட்சியிலும் பிரச்சினைகள் வரவேண்டும் என எடப்பாடி பழனிசாமி விரும்புகின்றார். தமிழகத்தில் ஏற்கனவே நடைபெற்ற பல தேர்தல்களில் காங்கிரஸ், திமுக கூட்டணி அமைத்து  பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளோம். இந்த தேர்தலிலும் யாரும் அழுத்தம் கொடுக்காமல் காங்கிரஸ்-திமுக கூட்டணி சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி 28 தொகுதிகளை பெற்றுள்ளோம். எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை. இதனால் எங்கள் கூட்டணியைப் பார்த்து இபிஎஸ் பொறாமையில் உள்ளார்.

தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் தேர்வுக்குழு மூலம் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும். சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் இளம் வயதினருக்கும் எம்.பி. சீட் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் திறமையாக செயல்படும் இளைஞர்களுக்கு தமிழக சட்டசபை தேர்தலில் சீட் வழங்கப்படும்.

அதே நேரத்தில் கட்சிக்காக பாடுபட்ட, அனுபவம் வாய்ந்தவர்களை ஒதுக்கிவிடாமல் அவர்களுக்கும் சீட் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது குறித்து தற்போது ஆலோசனை நடத்தி வருகிறோம். நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top