பிழையில்லாத வாக்காளர் பட்டியலை தயார் செய்ய, அரசியல் கட்சி முகவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தகில், ஓட்டுச்சாவடிகள் சீரமைப்பது குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், 1,200-க்கு மேல் வாக்காளர்களை கொண்ட ஓட்டுச்சாவடிகளை பிரிப்பது மற்றும் ஓட்டு சாவடிகளை மறுசீரமைத்தல் குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், 6 சட்டசபை தொகுதிகளிலும், 1,629 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. இதில், 1,421 ஓட்டுச்சாவடிகளில், 1,200-க்கும் குறைவான வாக்காளர்களும், 208 ஓட்டுச்சாவடிகளில், 1,200-க்கும் அதிகமான வாக்காளர்களும் உள்ளனர். தரமான மற்றும் பிழையில்லாத வாக்காளர் பட்டியலை தயார் செய்வதன் அவசியம் குறித்து, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான துர்கா மூர்த்தி விளக்கினார்.
மேலும், இறந்த வாக்காளர் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தங்கள் கட்சி சார்பாக ஓட்டுச்சாவடி நிலை முகவர்களை நியமனம் செய்து, போட்டோவுடன் கூடிய பட்டியலை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கும் ஆண்டாக இருப்பதால், முன்கூட்டியே வாக்காளர் பட்டியலை, 100 சதவீதம் சரிசெய்வதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுடன், அரசியல் கட்சி முகவர்களும் களப்பணியில் இணைந்து செயலாற்றி, தரமான, பிழையில்லாத வாக்காளர் பட்டியலை தயார் செய்ய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சுமன், ஆர்.டி.ஓ.,க்கள், அங்கித் குமார் ஜெயின், சாந்தி, சப் கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் அரசியில் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.




