Close
அக்டோபர் 5, 2024 6:50 மணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி தேய்பிறை பிரதோஷ பூஜை..!

வண்ண உப்பில் பாா்வதி தேவி ஒவியம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாசி மாத மகா சிவராத்திரி தேய்பிறை பிரதோஷ விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த சிவராத்திரியானது உருவான ஸ்தலம் திருவண்ணாமலை. குறிப்பாக மகா சிவராத்திரி தினமான நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலின் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து அதிகாலை 5 மணி முதல் பகல் 2 மணி வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. பகல் 12:00 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் மாலை 5 மணிக்கு சாய ரட்சை அபிஷேகமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு எட்டு மணிக்கு சந்திரசேகர் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடும் நடைபெற்றது.

மேலும் இரவு ஏழு முப்பது மணிக்கு மகாசிவராத்திரியின் முதல் கால பூஜையும் இரவு 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, இரண்டு முப்பது மணிக்கு மூன்றாம் கால பூஜையும் அதிகாலை நான்கு முப்பது மணிக்கு நான்காம் கால பூஜைகளும் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் லிங்கோத்பவர்

மூன்றாம் கால பூஜையை உமையாளும், நான்காம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் நிறைவேற்றுவதாக ஐதீகம்.
மேலும் நள்ளிரவு 12 மணிக்கு கருவறையின் மேற்கு திசையில் அருள் பாலிக்கும் லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.. அன்று மட்டும் தாழம்பூ பூஜை நடைபெறுவது சிறப்பாகும்.

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில் கலையரங்கத்தில் மாலை 5 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை பரதநாட்டியம், தேவார பாடல்கள், இன்னிசை நிகழ்ச்சிகள் , நடைபெற்றது. மேலும் ராஜகோபுரம் எதிரில் 108 தவில் நாதஸ்வர கலைஞர்கள் தொடர் இசை நிகழ்ச்சி காலை தொடங்கி மறுநாள் அதிகாலை ஐந்து மணி வரை நடைபெற்றது.
தேய்பிறை பிரதோஷ பூஜை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாசி மாத மஹா சிவராத்திரி தேய்பிறை பிரதோஷ பூஜை வழிபாடு நடந்தது.இதை முன்னிட்டு, கோவில் கொடி மரத்தின் அருகில் உள்ள சிறிய நந்தி, கிளி கோபுரம் எதிரில் உள்ள அதிகார நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகில் உள்ள பெரிய நந்தி ஆகியவற்றிற்கு பால், பன்னீர், அரிசி பொடி, தயிர், பஞ்சாமிர்தம், தேன், எலுமிச்சை, விபூதி, இளநீர் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்று இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.

மகா சிவராத்திரியையொட்டி, ஆரணி பகுதியில் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை கோயிலில் பக்தா் வேலுமணி தலைமையில் 4 டன் வண்ண உப்பால் பாா்வதிதேவி, திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் காட்சியை வரைந்தனா். இதையடுத்து, பாா்வதிதேவி ஓவியத்துக்கு கற்பூரம் ஏற்றி பக்தா்கள் வழிபட்டனா். தொடா்ந்து, கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆரணி பக்தா்கள் சங்கத்தினா் செய்திருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top