திருவண்ணாமலை மலையடிவாரத்தில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை. மேலும் திருவண்ணாமலை மலையடிவார வீடுகள் அகற்றப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏற்பாடுகள் செய்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான அண்ணாமலையார் திருக்கோயிலில் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையில் மீது கடந்த டிசம்பர் மாதம் பெஞ்சால் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் மலையின் மீது பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
வரலாறு காணாத மழை பெய்தது கனமழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் சிக்கிக் கொண்டு உயிரிழந்தனர் . தொடர்ந்து மண் சரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக புவியியல் வல்லுநர் குழு தமது ஆய்வு அறிக்கையில் எச்சரித்துள்ளது.
மேலும், இந்த மலைப்பகுதி வசிப்பதற்கு உகந்த இடம் இல்லை எனவும், அடுத்தடுத்து கனமழை பெய்தால் மேலும் மண் சரிவும், பாறைகள் உருண்டு விழும் ஆபத்து இருப்பதாகவும் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவண்ணாமலையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டது அதனால் பாறைகளை அகற்றுவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். பாறைகளை வெடி வைத்து தகர்க்கலாமா அல்லது ரசாயனம் கலந்த முறையில் பாறைகளை வெடிக்க வைத்து அகற்றலாமா என்ற ஆலோசனையும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது அப்பகுதியில் அதிகம் குடியிருப்புகள் இருப்பதால் பாறைகள் வெடித்து சிதறாக அளவிற்கு கவனமாக பாறைகளை உடைக்கும் பணியில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அபாயகரமாக இருந்த 40 டன் ராட்சத பாறையும் தற்போது முழுமையாக தகர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் எ.வ.வேலு பாறைகள் உடைக்கப்பட்ட விதம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு தற்போதைய நிலைமை குறித்து அதிகாரிகளிடம் முழுமையாக கேட்டு அறிந்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்
வரலாறு காணாத மழை காரணமாக மலையில் மண் சரிவு ஏற்பட்டு 40 டன் பாறை உருண்டோடி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மலையில் நான்கு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் 40 டன் எடை கொண்ட பாறையை முதற்கட்டமாக திருச்சி வல்லுனர்களைக் கொண்டு முழுமையாக உடைத்து எடுக்கப்பட்டுள்ளது
தொடர்ந்து தீபமலை மீது இரண்டு இடங்களில் உள்ள சிறு சிறு பாறைகளையும் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடைக்கப்படும் பாறைகள் அளவாக உடைக்கப்பட்டு ஐஐடி பேராசிரியர்கள் வல்லுநர் குழு கூறியதன் பேரில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீண்டும் மழை வருமேயானால் அங்கு சிறிய அளவு செக்டேம் கட்ட ஏதுவாக அனைத்து பாறைகளும் பயன்படுத்தப்படும். அந்த வேலையில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபடுவர்.
மலையடிவார பகுதியில் குடியிருப்பவர்களை அரசு காலி செய்ய சொல்லவில்லை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொகுத்த வழக்கில் அடிப்படையில் தான் தற்பொழுது மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற உத்தரவின் படி பணி செய்து கொண்டிருக்கிறது.
இப்பகுதி மக்களின் தொடர் பயம் காரணமாக இப்பகுதி மாமன்ற உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரை அனுகி மக்களின் நியாயத்தை எடுத்துக் கூறும் வகையில் வழக்கு தொடர உள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், மாவட்ட வருவாய் அலுவலர் ராம பிரதீபன், மாநகராட்சி ஆணையாளர் காந்தி ராஜன் ,முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன், வருவாய்த்துறை, மாநகராட்சி அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.





