நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி வாக்காளர்களுக்கு பிப்.5ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் அறிவித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவினை உறுதி செய்ய ஏதுவாக, நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள அனைத்து பணியாளர்களுக்கும், சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களில் பணி புரியும், ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் தேர்தல் தினத்தன்று சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும்.
பிப்ரவரி 5-ஆம் தேதி புதன்கிழமை தேர்தல் தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத தொழில் நிறுவனங்கள் மீதான புகார்களை தெரிவிக்க தொழிலாளர் துறையின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய புகார்கள் இருந்தால் ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமியை 9445398751 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.