வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல், 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை மாதம் தோறும் வழங்கப்படுகிறது.
அதன்படி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 300, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 400, பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம், 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை இனி வரும் காலங்களில், மாதம் ஒன்றுக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 600, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு, ரூ. 1,000 வீதம், 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், தற்போது, கடந்த 1 முதல், வரும் மார்ச் 31ம் தேதி வரையிலான காலாண்டிற்கு, மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகள் முடிவுற்ற பதிவுதாரார்களும், ஒரு ஆண்டு முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்கலாம்.
அவர்கள், உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு, அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டையுடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், tnvelaivaaippu.gov.in என்ற வெப்சைட்டில் இருந்து விண்ணப்பத்தை டவுன் லோடு செய்தும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.